நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
சென்னை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள திடலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முப்படையினர், காவல்துறை, என்சிசி என 48 படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு காந்தியடிகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். நாட்டின் 71 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுதும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது.