கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் உறுதி கூறினார்.
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்டுவார் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை வடிவமைத்த திருவள்ளுவர் சிலைகளை, இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் உலக திருக்குறள் மாநாட்டுக்கு அனுப்பும் நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், நிதிநிலையில் அறிக்கையில் தொல்லியல் துறை பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தார். தமிழகத்தில் தான் தொல்லியல் ஆய்வு அதிகமாக நடப்பதாகவும் எனவே அந்த பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்
முன்னதாக மத்திய நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் கீழடி குறித்து அரசியல் ரீதியில் குரல் எழுப்பப் பட்டது.