அருள்மிகு அழியாதீஸ்வரர் திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கோவிலைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் ஏற்படுத்தக் கோரியும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது! விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஆறுமுக கனி தலைமையில் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திங்கள் கிழமை இன்று மனு அளித்தனர்.
இந்த மனுவில் குறிப்பிடப் பட்டிருந்ததாவது…திருநெல்வேலி நகர் பகுதியில் கருப்பந்துறை அருள்மிகு அழியாத ஈஸ்வரர் திருக்கோவில் அதிக அளவில் பக்தர்கள் வழிபாடு செய்யும் திருக்கோவில். பிரதோஷம் மாத சிவராத்திரி மகாசிவராத்திரி காலங்களில் மேற்படி கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். ஆனால் பக்தர்களுக்கு வசதி செய்யாமல் கோவில் பின்புறம் வழியாக மிகக் குறுகிய பாதையில்தான் உள்ளே சென்று வருகின்றனர்.
திருக்கோயிலுக்கு சொந்தமான சர்வே எண் 7 மற்றும் 8 ஆகிய எல்லைகளைக் கொண்ட நிலம் உள்ளன. இந்த திருக்கோவிலில் நந்தவனம் இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் கோவில் நிலங்களை கருப்பு துறையைச் சேர்ந்த எல் தர்மராஜ் மற்றும் எல் அருளானந்த ஜார்ஜ் ஆகியோர் நந்தவன கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மேற்கொண்டு கட்டடங்களையும் கட்டி வருகின்றனர்
திருக்கோயிலின் பின்புறம் கட்டடங்கள் மின் இணைப்பு எண் tnad1307 பெற்று சட்டத்திற்குப் புறம்பாக மின் இணைப்பு பெற்றுள்ளனர். சர்வே எண் 7 மற்றும் 8 விவசாய நிலங்கள் திருக்கோவில் பெயரில் பட்டா உள்ளது. இதில் ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கட்டடங்களை அப்புறப்படுத்தி புதிய மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக கோவிலின் முன்புறம் தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். கோவில் நிலங்களை அளவீடு செய்து பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாவிட்டால், ஊர் மக்களை ஒன்றிணைத்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் முன் தெரிவித்துக் கொள்கிறோம்.
-என்று திருநெல்வேலி விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஆறுமுக கனி பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது!