திருச்சியில் அரசு பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு என்ன காரணம் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூரில் வில்வாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் அரியமங்கலம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரது மகள் புனிதவதி (31).
இவர் எம்பிபிஎஸ், எம்டி படித்து முடித்துவிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டாக்டர் புனிதவதியின் பெற்றோர் கோயிலுக்கு சென்றனர்.
பின்னர் இரவில் வீடு திரும்பிய போது புனிதவதி தன் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அவர் தூங்கவில்லை என நினைத்து பெற்றோர் தூங்கச் சென்றுவிட்டனர். ஆனால் நள்ளிரவிற்கு மேலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அவர் மயக்க நிலையில் கிடந்தார். அவருக்கு பக்கத்தில் ஒரு ஊசியும், மருந்தும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலுதவி கொடுத்து அரசு மருத்துவமனைக்க்கு அழைத்து செல்லும்படி கூறினர். அங்கு அழைத்து சென்ற நிலையில் புனிதவதியை பரிசோதித்த மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.