சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே, ‘வட மாநிலத்தவர்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகையை வட மாநிலத்தவர் வெகு விமர்சியாக கொண்டாடினர். இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்தவர்களும் ஹோலி பண்டிகை கொண்டாடினர்.
இந்நிலையில் சென்னையில் வட மாநிலத்தவர்கள் அதிகமாக குடியிருக்கும் இடங்களில் ஒன்றான வேப்பேரி பகுதியில், வட மாநிலத்தவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், ‘வட மாநிலத்தவர்களை தமிழகத்தை விட்டு விரட்டுவோம்’ என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அதே போல சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள ஈவிகே சம்பத் சாலையில் உள்ள ஒரு வீட்டிலும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீடு ஆகியவற்றின் கேட்டுகளை பூட்டி, ”தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் வட மாநிலத்தவர்கள் உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேறு’ என்ற வாசகங்கள் அந்த சுவரொட்டிகளில் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வேப்பேரி காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பூட்டை உடைத்து மற்றும் சுவரொட்டியை கிழித்தனர். தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் அந்த சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பதால் இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகம் எதிரிலேயே நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.