மதுரை நகரில் பூதத்தின் உருவத்தில் வரையப்பட்டுள்ள கொரோனா கோலம் காண்பவர்களை ஆச்சரியப் படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
மதுரை தாசில்தார் நகரில் வெற்றி விநாயகர் ஆலயம் அருகே ஒரு வீட்டின் முன்பாக பூதத்தின் உருவத்தில் கொரோனா விழிப்புணர்வு கோலமானது வரையப்பட்டிருந்தது. பூதம் நாக்கை நீட்டிக் கொண்டு பயமுறுத்தும் விதத்தில் அமைந்திருந்தது.
அந்தக் கோலத்தின் அருகே விழிப்பு உணர்வூட்டும் வாசகங்களும் எழுதப் பட்டிருந்தன. இந்தக் கொடிய நோயை அகற்ற பாடும்படும் நமது பிரதமர், முதலமைச்சர், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினருக்கு தங்களது நன்றியை காணிக்கை ஆக்குவதாக எழுதப்பட்டிருந்தது.
மேலும், கொரோனாவுக்கு விடைகொடுப்போம். 144.தடை உத்தரவிலிருந்து விலக்கு பெறுவோம் என, கோலத்தின் அருகே எழுதப் பட்டிருந்ததையும் காணமுடிந்தது.
கொரோனா எனும் அரக்கனை ஒழிப்பதற்காக, நாடே ஒன்று பட்டு எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், பூதத்தின் உருவில் வரையப்பட்டிருந்த கோலத்தை பலர் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை