சென்னை…..மே 17-ம் தேதிக்கு பிறகும் இம்மாதம் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு தொடரும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சென்னை, கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்தாலும் அம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மருத்துவக் குழுவினருடனான ஆலோசனைக்குப் பிறகு இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் ஊரடங்கை முழுவதும் நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்கினால் நோய்த் தொற்று அதிகமாகி விடும் என அரசுக்கு மருத்துவக் குழுவினர் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து நாளை தமிழக அரசு இதை முறைப்படி அறிிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் முதல்வருடன் நடந்த கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த மருத்துவக் குழுவினரின் ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது மருத்துவக் குழுவில் இடம் பெற்றுள்ள ஐசிஎம்ஆர் அமைப்பின் நிர்வாகி பிரதீப் கவுர் கூறியதாவது:
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்தப் பரிசோதனையை குறைக்கக் கூடாது என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். அதிக அளவிலான பரிசோதனைகள் நடந்ததால்தான் அதிகளவு கொரோனா பரவலைக் கண்டுபிடிக்க முடியும். பாதிப்பு அதிகரிப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. தமிழகத்தில் கொரோனாவினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
பணியிடங்களில் தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஊழியர்கள் அனைவருக்கும் இலவசமாக மாஸ்க் வழங்க வேண்டும். கட்டாயம் மாஸ்க் அணிந்துதான் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல், படிப்படியாக தளர்த்த வேண்டும் என்றார் பிரதீப் கவுர்.
- செய்தி: சதானந்தன், சென்னை