முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, சசிகலா குடும்பத்தினரிடம் சிக்கி படாத பாடு பட்டார். ஜெயலலிதா சமாதியாகியும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு படுகிறார்.
சசிகலா, முன்னர் மூன்று முறை ஜெயலலிதா சமாதியில் கையால் ஓங்கி அடித்து அடித்து அடித்து துயில் கொண்டிருக்கும் ஜெயலலிதாவை தட்டி எழுப்பினார். இன்று அவரது அக்காள் மகன் தினகரனோ, காலால் ஏறி மிதித்து ’மரியாதை’ செய்து விட்டார். மன்னார் குடி குடும்பத்தின் சாகசங்கள் இப்போதும் இப்படியாகத் தொடர்வதாக நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.
ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு டிடிவி தினகரன், வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரைக்கு பேரணியாக வந்தார். சமாதியில் அஞ்சலி செலுத்தச் சென்ற போது, ஏராளமானோர் அவருடன் சென்றனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்ட்டனர். தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதம் நடத்தி, ஆதரவாளர்கள் புடைசூழ உள்ளே சென்றனர் தினகரன். அங்கு ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளி கூச்சல்குழப்பத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலை சமாளிக்க முடியாத தினகரன், ஜெயலலிதா சமாதியில் ஏறியே நின்றார். இதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.