மதுரை:
தீவிபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பசுபதீச்வரர் சந்நிதி மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்குப் பகுதி கோபுரத்தை ஒட்டிய பகுதியில் கடந்த பிப். 2ஆம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் இருந்த சுமார் 50 கடைகள் சேதம் அடைந்தன.
தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து மற்ற பகுதிகளில் தீ பரவாமல் தடுத்தனர். இருப்பினும், திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தை அறிந்த மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் தீ விபத்தில் சேதமடைந்த பசுபதீஸ்வரர் சந்நிதியின் மேற்கூரை நேற்று இரவு இடிந்து விழுந்தது. இது பக்தர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீ விபத்தால் ஆட்சி செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவதால், பக்தர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்ததால், மேலும் பரபரப்பு கூடியுள்ளது.