கடந்த பிப்.2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு கோபுரத்தை ஒட்டிய வீரவசந்தராயர் மண்டப பகுதியில் இருந்த வர்த்தகக் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இது சமூக மட்டத்தில் பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரைக்கு மறுப்பாக எழுதப் பட்ட கட்டுரை இது…
‘தீ’ 65வது திருவிளையாடல்!
கோயில் சொத்து எல்லாம் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட சொத்து இல்லை. பல அரசர்கள் மற்றும் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் அளித்தவையே. அந்தக் காலத்தில் நிர்வாக சீர்கேடுகள் ஏற்பட்டதால்தான் அரசு கையகப்படுத்தியதாக சு. வெங்கடேசன் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். மேலும் அவர் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற முறைகேடுகளால் தான் அதை பிரிட்டிஷ் ஆட்சியில் கலெக்டராக இருந்த பிளாக்பெர்ன், ஆதினத்திடமிருந்து மீட்டு சிறப்பான புதிய நிர்வாகத்தை உருவாக்கினார் என்கிறார்.
ஆன்மீகத்தை வளர்க்க அரசர்களும் ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்களும் உருவாக்கி நிர்வகித்து வந்த கோயில்களில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டால், நிர்வாகத்தை மாற்றி அமைத்து சரி செய்திருக்கலாம். அப்படி இல்லாமல் அவர்கள் செயல்பட்டது கோயிலை வழிபாட்டு தலமாக பார்க்காமல் ஒரு வியாபார இடமாக பார்த்ததுதான் காரணம்.
நமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயன், நம்மை அடிமையாக வைத்திருந்தான். நாம் அவனிடமிருந்து விடுதலை வேண்டினோம். அப்படி இருக்கும்போது அவன் நம் வழிபாட்டு இடத்தை பிடுங்கி ஒழுங்குபடுத்தினான் என்றால், அவனே நம் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தான் என்று அவனையே தொடர்ந்து ஆட்சி செய்ய விட்டிருக்கலாமே! இது வெங்கடேசனின் சறுக்கல்.
விருது பெறும் வகையில் சிறப்பாக மதுரை கோயில் நிர்வாகம் இருந்தது, பல வித புதுமைகளை செய்தோம் என்கிறார்கள். சரியாக இருக்கலாம். ஆனால் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஊர் மக்கள் கையில் நிர்வாகம் இருந்திருந்தால், இப்படி ஒரு விபத்தும் ஏற்பட்டிருக்காது, திருப்பதி கோயிலுக்கு இணையாக மதுரை கோயிலும் உருவாகியிருக்கும் என்பதே உண்மை.
மீனாட்சியம்மன் கோயிலின் தக்கார் கருமுத்து கண்ணன், ”25 லட்சம் ரூபாய்க்கு சென்று கொண்டிருந்த பிரசாதக் கடை டெண்டரை நிறுத்திவிட்டு கோயில் நிர்வாகமே பிரசாத விற்பனையில் ஈடுபட்டதால் ஆண்டுக்கு 2 கோடி வருமானம்” என்கிறார். மேலும் அதனைக் கொண்டு பல சேவைப் பணிகளை செய்கிறோம் என்பதாக கூறுகிறார்.
சரி. அப்படியென்றால் ஆன்மீக ஈடுபாடு கொண்ட பக்தர்களிடம் நிர்வாகத்தை கொடுத்து அரசும் கண்காணிப்பில் ஈடுபட்டால் இன்னும் அதிக அளவில் சேவையும் செய்ய முடியுமே. ஏன் மக்களை உடன் இணைத்துக்கொண்டு செய்யக் கூடாது? கோயில் வெறும் பணம் காய்ச்சி மரம் அல்ல.
தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் 38,636 கோயில்கள் தமிழகத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் பல கோயில்கள் இன்று காணமல் போயுள்ளன. முறையாக வழிபாடு நடந்து வந்த, வருமானம் வரும் கோயில்களை மட்டும்தான் அறநிலையத் துறை கையகப்படுத்தியது. உண்டியல் இல்லாத கோயில்களை ஒருநாளும் நிர்வாகத்துக்குள் கொண்டு வந்ததில்லை அறநிலையத் துறை… என ஹெச். ராஜா சொல்கிறார்.
அறநிலையத்துறை வசம் உள்ள கோயில்களை ‘இந்து ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்து இயங்கும் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்’ 1985ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அரசால் உருவாக்கப்பட்ட கமிட்டி பரிந்துரைத்தது. அதைத்தான் இப்போது செயல்படுத்தச் சொல்கிறோம் என்று ஹெச். ராஜா சொல்வது கவனிக்கத்தக்கது.
கோயில் வியாபார இடமாகவோ, ஆன்மீகத்திற்கு தொடர்பு இல்லாத விதத்திலோ செயல்படுவதை ஏற்க முடியாது. கோயில் வருமானம் முழுவதும் ஆன்மீக விஷயங்களுக்கே பயன்படுத்தப்படவேண்டும். வேறு விஷயங்களுக்கு மடை மாற்றப்படுவது கூடவே கூடாது. மொத்தத்தில் கோயில் ஆன்மீகத்திற்காக; கோயில் சொத்தும் ஆன்மீகத்திற்காகவே.
இந்த தீ விபத்து கவலை அளிக்கக் கூடிய விஷயம்தான். ஆனால் நல்லதொரு ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்னும் விதத்தில் இந்த நிகழ்வு மக்களுக்கு கோயில் சொத்தை காப்பாற்றுவதில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. ‘தீ’ 65வது திருவிளையாடல் எனலாம்!