சென்னை:
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என்று கூறிய செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், அவருக்கான தண்டனையை பின்னர் அறிவிப்பதாகக் கூறினார்.
போரூர் சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதி, செக்சன் 363, 366, 354, 202, 302 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளி என தீர்ப்பு கூறினார்.
மேலும், ஆள் கடத்தல், பாலியல் அத்துமீறல், பாலியல் துன்புறுத்தல், குற்றங்களை மறைத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் தஷ்வந்த் குற்றவாளி என்றும் பாக்சோ சட்டம் 6, 7, 8 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி என்றும் செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தஷ்வந்துக்கான தண்டனை விவரம் ஒத்திவைக்கப் பட்டது. அடுத்த 1 மணி நேரம் கழித்து தண்டனை விவரத்தை தெரிவிப்பதாக நீதிபதி அறிவித்தார். இந்நிலையில், தேவையில்லாமல் கண்டபடி செய்தி போட வேண்டாம் என செய்தியாளர்களை பார்த்து ஆங்கிலத்தில் தஷ்வந்த் ஆவேசமாகப் பேசினான்.
இந்நிலையில், தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. இந்தத் தீர்ப்பு குறித்து விவரத்தை அறிவித்த வழக்கறிஞர் கண்ணதாசன், தஷ்வந்துக்கு 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப் பட்டதாகக் கூறினார்.