சென்னை:
தமிழக அரசு இயந்திரம் கிறிஸ்துவ மிஷனரிகளிடம் விலை போயுள்ளது வெட்கக் கேடு என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்…
பாலேஸ்வரம் செயிண்ட் ஜோசப் கருணை இல்லம் ஓரிரு நாட்களில் சீல் வைக்கப்படும் என டி.ஆர்.ஓ. நூர் முகம்மது கூறியிருப்பது கண்துடைப்பு. இன்னமும் கொலையாளி பாதிரியார் தாமஸ் ஏன் கைது செய்யப்படவில்லை. அரசு இயந்திரம் கிறித்தவ மிஷநரிகளிடம் விலை போயுள்ளது வெட்கக்கேடு. போராட தயாராவோம்
பாலேஸ்வரம் செயிண்ட் ஜோசப் கருணை இல்லம் ஓரிரு நாட்களில் சீல் வைக்கப்படும் என RDO நூர் முகம்மது கூறியிருப்பது கண்துடைப்பு. இன்னமும் கொலையாளி பாதிரியார் தாமஸ் ஏன் கைது செய்யப்படவில்லை. அரசு இயந்திரம் கிறித்தவ மிஷநரிகளிடம் விலை போயுள்ளது வெட்கக்கேடு. போராட தயாராவோம்
— H Raja (@HRajaBJP) February 26, 2018
– என்று கூறியுள்ளார் ஹெச்.ராஜா. ஏற்கெனவே கடந்த 2015ல் இந்த கருணை இல்லம் தொடர்பாக புகார் எழுந்தது. அப்போது இந்தப் புகாரை விசாரித்து உயர் மட்டத்தில் கூறிய சமூக நலத்துறை அதிகாரிகள்தான் இடம் மாற்றப் பட்டனரே தவிர, இந்த இல்லம் மீது எந்த வித விசாரணையும் தொடங்கப் படவில்லை.
அந்த தைரியத்தில்தான், இந்தக் கருணை இல்லத்தின் பாதிரி தாமஸ், இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிகாரிகள் எதற்கு இருக்கிறார்கள்? வந்து பார்க்கட்டுமே! விசாரணை நடத்தட்டுமே! என்று பளிச்சென திமிர்த்தனமாகக் கூறியுள்ளார். எனவே, இது விவகாரத்தில் மாவட்ட காவல்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் இந்த இல்லத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று உள்ளூர் மக்கள் பரவலாக குற்றம் சுமத்துகின்றனர்.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே செயல்பட்டு வரும் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லம் குறித்து, மனித எலும்புகளை சேகரித்து பணத்திற்காக கடத்துகிறார்கள், கருணைக்கொலை செய்துவிடுகிறார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டன. இதை அடுத்து ஆர்.டி.ஓ. சமூக நலத்துறை அதிகாரி மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில், கடந்த ஜனவரி மாதம் 60 பேர் மர்மமாக உயிரிழந்துள்ளனர் என்பதும், மாதத்திற்கு 40 முதல் 50 பேர் இறந்து விடுவதாகவும் செய்திகள் வெளியாயின. இதனால் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், முதியவர்களை கொடுமைக்குள்ளாக்கிய செயின்ட் ஜோசப் கருணை இல்லத்துக்கு இன்னும் 2 நாட்களில் சீல் வைக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமது தெரிவித்திருந்தார். மேலும், நல்ல உடல்நிலையில் உள்ள 86 பேர் இன்றே இடமாற்றம் செய்யப்படுவர் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் டிஆர்ஓ தலைமையிலான குழுவினர் இன்று பாலேஸ்வரம் காப்பகத்தில் விசாரணை நடத்தியபோது, காப்பகத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்த 20 முதியோர்களை, மதுராந்தகத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இரு தினங்களுக்கு முன்னர் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜு, அரசுக்கு விரைவில் இது குறித்து அறிக்கை அனுப்பப் படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.