சென்னை:
அவர்களை நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்க, எப்போது பார்த்தாலும் பாஜக., மீதே பாய்கிறீர்களே! என்று கூறியுள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
ஹெச்.ராஜா குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அவர் முகநூலில் பதிவிட்டது தொடர்பாக என்னிடம் கேட்டால் நான் எப்படி கருத்து சொல்வது. இதற்கான கருத்தை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்… என்று கூறினார்
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழிசை. அப்போது அவர் கூறியவை…
நாங்கள் நாகரீகமாக கட்சி விரோத நடவடிக்கை என்று சொல்லி திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறோம். இணைய தளத்தில் பதிவிட்ட கருத்து தனது கருத்து இல்லை என்றும், தனது அட்மின் போட்டது என்றும், தவறு என்று கருதப் பட்டதால் உடனே நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த விளக்கத்தை கட்சி ஏற்றிருக்கிறது. அந்தக் கருத்து தனது கருத்து இல்லை என்று அவர் சொல்லும்போது தூண்டியவர் அவராக இருக்க முடியாது. அதை ஏற்றுக் கொண்டுதான் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… என்று விளக்கம் அளித்துள்ளார் தமிழிசை.
தொடர்ந்து, “எங்கள் கட்சியிலும் என் மீது விமர்சனம் வருகிறது. தவறு என்று தெரிந்ததும் நீக்கி இருக்கிறேன். அதுதான் கட்சியின் நிலைப்பாடு. திருவல்லிக்கேணியில் பூணூல் அறுக்கிறார்கள். எங்கள் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள். வேண்டுமென்றே ஒரு கொதிநிலையில் தமிழகத்தை வைத்திருப்பது எப்படி சரியாக இருக்கும். நான் நடவடிக்கை எடுத்தது போல வன்முறையில் ஈடுபடும் தொண்டர்கள் மீது அவர்களது கட்சியையும் நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். எப்போதும் பாஜக., மீதே சுட்டிக் காண்பிப்பது எப்படி சரியாக இருக்கும். இந்த விஷயத்தில் அவரவர் கருத்தை அவரவர் சொல்லலாம். ஆனால் நான் சரி என்று கருத்து சொல்லவில்லை. நாங்கள் எடுக்கும் நடவடிக்கையை மற்ற கட்சியும் எடுக்கட்டும் என்கிறேன்.
கோவிலை இடிப்பேன் என்கிறார்கள். சிலையை உடைப்பேன் என்கிறார்கள். பூணூலை அறுக்கிறார்கள். பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள்… அவர்கள் மீது முதலில் கட்சி ரீதியான நடவடிக்கை எடுங்கள். ஸ்டாலின் உள்பட எல்லோருக்கும் நான் சொல்லும் செய்தி அதுதான். எந்த விதத்திலும் நேர்மறை அரசியலை எடுத்துச் செல்வோம். எதிர் மறை அரசியல் தேவையில்லை. வளர்ச்சி அரசியல் இருக்கட்டும். கிளர்ச்சி அரசியல் தேவையில்லை.
சிலை விவகாரத்தில் பிரதமர், பாஜக, அகில இந்திய தலைவர் ஆகியோரும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். பொறுப்பாளர் முரளிதரராவும் நானும் கருத்து பதிவிட்டு இருக்கிறோம். கருத்துக்கு கருத்து மோதல் இருக்கலாம். ஆனால் அது வன்முறையாக மாறக்கூடாது. அதில் தெளிவாக இருக்கிறோம். அதே தெளிவு மற்றவர்களிடமும் இருக்க வேண்டும். எந்த சிலையையும் சேதப்படுத்துவது என்பது பாஜக.,வின் கொள்கையில்லை… என்று கூறினார் தமிழிசை.