கரூர்: கரூரை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், விவசாயி ஆக நான் வந்து இருக்கிறேன் ! கோதாவரி_ காவிரி இணைப்பு திட்டம் கரூர் பகுதியில் இணைக்கும் வகையிலான இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
இன்னும் நான்கு தொகுதிகளுக்கு தேர்தல் முடியவில்லை. அதற்குள் முதலமைச்சர் கனவு காண்கிறார் ஸ்டாலின். உங்கள் கனவு கானல் நீராகத்தான் இருக்கும். இந்த தேர்தலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை அதனால்தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
செந்தில் பாலாஜி அரசியல்வாதியல்ல; அரசியல் வியாபாரி. வியாபாரம் எங்கு நடக்கிறதோ அங்கு கடையை விரிக்க சென்று விடுவார்..!
இது இடைத்தேர்தல். தற்போது அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் வகிக்கும் கட்சி வெற்றி பெற்றால்தான் அரவக்குறிச்சி தொகுதிக்கு தேவையான நலத் திட்டங்களை வந்து சேரும்.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை தான் தேர்தல். ஆனால் மூன்று ஆண்டுகளில் மூன்று கட்சிகள் மாறியவர்தான் செந்தில் பாலாஜி. இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக பச்சை பொய் கூறினார் கருணாநிதி. தற்போது அதே கட்சியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி 3 சென்ட் நிலம் தருவதாக பொய்யான வாக்குறுதி தருகிறார்.
ஒருவரை கெடுக்க வேண்டுமென்றால் ஆசை வார்த்தை கூற வேண்டும். அதைத்தான் செந்தில் பாலாஜி செய்து கொண்டிருக்கிறார்.
கட்சிக்கும் இப்பகுதி பொது மக்களுக்கும் விசுவாசமாக வும் நம்பிக்கையோடும் இருப்பவர் செந்தில்நாதன். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
- செய்தி: மணிகண்டன், கரூர்