கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க. பிரமுகரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இச்லாமிய மத மாற்றத்தில் ஈடுபட்ட சிலரை தடுக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. இந்தக் கொலையைக் கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்தப் படுகொலை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சிறப்புக் குழுவை அமைத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை அடுத்து, தேசிய புலனாய்வு முகமை கொச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜஸ்வீர் சிங் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை தென்காசிக்கு வந்தனர். உள்ளூர் அதிகாரிகள், ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான தென்காசி போலீசாருடன் சென்று தென்காசி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தெருவில் உள்ள மைதீன் அகமது ஷாலியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து எகிப்து, பாகிஸ்தான், கத்தார், ஈரான் நாட்டு பணம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
இது குறித்து மைதீன் அகமது ஷாலியின் உறவினர்கள் கூறுகையில், “இந்த வழக்கில் அவர் திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும், இந்த கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை. வக்கீலை சந்திக்க அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை” என்றனர்.
அகமது சாலிஹின் மனைவி ஆயிஷா பானு, இது குறித்து அங்குள்ளவர்களிடம் கூறியபோது, என் கணவர் பயன்படுத்திய பழைய காலாவதியான பாஸ்போர்ட், ஆதார் அட்டை, சில புத்தகங்கள் என எடுத்துச் சென்றுள்ளனர். பீரோவில் இருந்து வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாகக் காட்டினர். அவற்றை பீரோவில் இருந்து எடுத்ததாகக் கூறி, கையெழுத்து பெற்றனர். ஆனால் நான் அவற்றை இங்கே இதுவரை பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
அகமது சாலிஹின் வழக்குரைஞர் லுக்மான் ஹக், இது குறித்துக் கூறுகையில்,அகமது சாலிஹின் காலாவதியான பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வெளிநாட்டு கரன்சிகள், சில புத்தகங்கள் என எடுத்துச் சென்றுள்ளனர். சிலவற்றை அவர்களே கொண்டு வந்து வைத்து கையெழுத்துபெற்றுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த திடீர் சோதனை காரணமாக தென்காசியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
தென்காசியில் கடந்த இருபது ஆண்டுகளாகவே இஸ்லாமிய மயமாக்கமும் அவ்வப்போது மத மோதல்களும் தலை தூக்கியே வருகின்றன. குறிப்பாக, இந்து முன்னணி தென்காசி நகரத் தலைவர் குமார் பாண்டியன் 17-12-2006 அன்று படுகொலை செய்யப்பட்டார். அப்போது முதல் இஸ்லாமிய மதவெறி கும்பல்கள், அரசியல் கட்சி என்ற போர்வையில் இயங்கும் அடிப்படைவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்தே வந்திருக்கின்றன.
ஆனால் ஒவ்வொரு முறையும் பிரச்னை தலை தூக்கும் போதெல்லாம், இந்துக்களை அமைதிப் படுத்தி, அடிவாங்க வைத்து, அவர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக இழக்க வைத்து காவல் துறையினர் ஒருதலைப் பட்சமாகவே நடந்து வந்திருக்கின்றனர். தென்காசி போலீசாரின் இந்த குறட்டை விட்ட மெத்தனத்தின் விளைவு, இன்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை செய்யும் அளவுக்கு வளர்ந்து, தென்காசி போலீஸாரின் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது. இதே நிலை நாளை கடையநல்லூர் மற்றும் செங்கோட்டை போலீசாருக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் உள்ளூர் மக்கள்!