சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல் நிலை மோசமான நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9 ஆம் தேதி நீதிபதியின் முன் அவர் ஆஜரானார்.
உடல்நிலை பதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாகத்தான் வந்தார். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சிறைக்கு செல்லும் போதே அவருடைய உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்தது. அதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறைக் கைதிகளுக்கான வார்டில் ராஜகோபால் அனுமதிப்பட்டார்.
அவரது உடல்நிலை மேலும் மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதயம், நுரையீரல், சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகள் இருப்பதால் அந்தந்தப் பிரிவு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இதை அடுத்து, உடனடியாக செயற்கை சுவாசக் கருவி பொருத்தப் பட்டது. அவரது உடல் மருத்துவ இயந்திரங்கள் உதவியுடன் இயங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜகோபால் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவருடைய மகன் சரவணன், உறவினர்கள், நண்பர்கள், சரவண பவன் ஊழியர்கள் நேற்று இரவு முதல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.
இந்நிலையில் இரவு 3 மணிக்கு மேல் அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் கண்டதாக அவருடைய உறவினர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவியில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.