கரூர் மாவட்டம், குளித்தலை மாரியம்மன் கோவில் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளினை முன்னிட்டு தேசிய கல்வி நாளாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் காமராஜர் தனது ஆட்சி காலத்தில் ஏழை, எளிய குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் 14,000 பள்ளிக் கூடங்களை கட்டினார்.
மேலும் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தினையும் கொண்டுவந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் கல்வி மற்றும் பல துறைகளில் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உயர்த்தினார்.
தமிழக அரசு காமராஜர் அவர்களை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்தநாளினை தேசிய கல்வி நாளாக கொண்டாடி வருகிறது. காமராஜரின் 116 வது பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி குளித்தலை மாரியம்மன் கோவில் நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய அலுவலர் குமரவேல் மற்றும் ஏ.பி.டி.ஓ மங்கையற்கரசி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் பூபதிராஜ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்கள் காமராஜரின் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
பின் பள்ளி மாணவ, மாணவியர்கள் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியாசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.