கோயமுத்தூருக்கு வந்திருந்த பிரதமர் மோடி, கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த கூட்டத்தில், புதிய திட்டங்களை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வின் போது, திருப்பூர், மதுரை, திருச்சியில் 332 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார் பிரதமர் மோடி. பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், குடிசை மாற்று வாரியத்தால், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப் பட்டுள்ளன
புதிய திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தூத்துக்குடி துறைமுக பகுதியில், 8 வழி கோரப்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலத்தை அர்ப்பணித்தார்! மேலும், இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி வ.உ.சி துறைமுக பகுதியில் 8 வழி கோரப்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
பின்னர் இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். வழக்கம் போல், தமிழில் “வணக்கம்” எனக்கூறி பிரதமர் நரேந்திர மோடி உரையைத் தொடங்கினார். அப்போது, விவசாயிகளின் திட்டங்கள் குறித்து குறிப்பிட்டு, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்ற திருக்குறளை மேற்கோள்காட்டினார்.
அரசு சார் திட்டங்கள் அர்ப்பணிக்கப் படும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையினை, சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தயாரிப்பு அதிகாரி, ராமஸ்வாமி சுதர்ஸன் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியவை…
தமிழ்நாட்டிற்கு நல்ல பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்! பவானி சாகர் அணை விரிவாக்கம் திட்டம், தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு மேம்பாடு அளிக்கும் திட்டம்! பவானி சாகர் அணை விரிவாக்கம் திட்டத்தால், 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்!
இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியம் தடையில்லா மின்சாரம். 4 மாவட்டங்களில் 709 மெகாவாட் திறன் கொண்ட ரூ.3000 கோடி மதிப்பீட்டிலான சூரிய மின் சக்தி திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன்.
ரூ.8000 கோடி மதிப்பீட்டில் நெய்வேலியில் 1000 மெகா வாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் திறக்கப் பட்டுள்ளது! புதிதாக இப்போது தொடங்கி வைக்கப் பட்ட மின் திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 65% தமிழ்நாட்டிற்கே வழங்கப்படும்.
துடிப்பு நிறைந்த இந்திய கப்பல் போக்குவரத்தின் முன்னோடியாக திகழ்கிறவர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார். கப்பல் போக்குவரத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தொலைநோக்கு பார்வை நமக்கு உத்வேகம் அளிக்கிறது. ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மப்பேடு அருகே சாகர்மாலா திட்டத்தின் கீழ், சரக்கு வாகன நிறுத்தப் பூங்கா தொடங்கப்பட உள்ளது.
வளர்ச்சியும், சுற்றுச்சூழல் மீதான ஆர்வமும், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில், 500 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்பட்டுள்ளது. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில், 140 கிலோ வாட் சூரிய மின்ஆற்றல் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன! இதன் மூலம், தூத்துக்குடி துறைமுகத்தின் மொத்த மின்தேவையில் 60% நிறைவு செய்ய உதவும்.
தனிநபரின் கண்ணியத்தை, சுயமரியாதையை உறுதி செய்வது வளர்ச்சியின் மையக்கரு. தமிழ்நாடு மிகப் பெரும் நகர்புற மயமாக்கலை கொண்டிருக்கும் மாநிலம்! தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தல் மூலம், புதிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்… என்று குறிப்பிட்டார்.