பாரதமாதா நினைவாலயம் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் மூத்தபத்திரிகையாளர் மாலன். அவர் இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்…
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
பொருள்: பாரதமாதா நினைவாலயம் என்பதன் பெயரை மாற்றுக!
வணக்கம்
சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்ரமண்ய சிவாவின் கனவு பாரதமாதாவிற்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்பது. அதற்காக தர்மபுரி மாவட்டம், பாரதபுரத்தில் ஆறு ஏக்கர் நிலம் வாங்கி, ஆலயம் அமைக்க அடிக்கல்லும் நாட்டினார்.
நீண்ட நாள்களாக நிறைவேறாமல் இருந்த அவரது கனவை நிறைவேற்ற முன் வந்த முந்தைய அரசு ரூ 1.5கோடி நிதி ஒதுக்கி அங்கு ஆலயம் அமைக்கும் பணிகளைத் தொடங்கியது. அந்தப் பணிகள் நிறைவுற்று அண்மையில் அந்த ஆலயம் தமிழக செய்தித் துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன் முகப்பில் பாரதமாதா நினைவாலயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நினைவாலயம் என்பது இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்படும் நினைவுச் சின்னத்தைக் குறிப்பது. உயிரோடும் உயிர்ப்போடு இருப்பவர்களுக்கு நினைவாலயம் அமைப்பதில்லை
நிரந்தரமாக வழிபாட்டுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்களுக்கு ஆலயம் அமைப்பது உண்டு. நினைவாலயம் அமைப்பதில்லை. பாரதம் என்றும் இந்தியா என்றும் அழைக்கப்படும் இந்த நாடு பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்து வரும் நாடு. உலகின் ஆகச் சிறந்த நாகரீகங்களை, தொன்மை வாய்ந்த மொழிகளை, இலக்கியங்களை, வியத்தகு அறிவாற்றலை வெளிப்படுத்தி வந்த நாடு. இன்றும் விண்வெளி, கணினி, மருத்துவம்,எனப் பலதுறைகளில் உலகம் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்தி வருகிறாள். எங்கள் இந்தியத் தாய் இன்னும் இறந்து விடவில்லை.
நாம் நம் நாட்டைத் தாயாகக் காண்கிறோம். அதானால்தான் அதைத் தாய் நாடு என்று அழைக்கிறோம். அதன் இன்னொரு சொல்தான் பாரதமாதா
பாரதமாதா நினைவாலயம் என்ற பெயரைத் தமிழக அரசு உடனடியாக மாற்ற வேண்டும். அந்த இடத்திற்கு பாரதமாதா ஆலயம் என்றோ, பாரதமாதா திருக்கோயில் எனவோ பெயரிட வேண்டும் எனக் கோருகிறோம். இந்த நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வற்புறுத்துகிறோம்
நன்றி
வணக்கங்களுடன்
– மாலன்
என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். மேலும், நம் பாரம்பரிய மதிப்புகளில் நம்பிக்கையும் அக்கறையும் உள்ளவர்கள் முதல்வருக்கு கடிதம் எழுதி தெரியப் படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஒரு வரலாற்றுப் பிழை நம் காலத்தில் நிகழ்ந்து விடக் கூடாது என்று பதைபதைத்து பலரும் இது போன்ற கடிதங்களை எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.