மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பேசினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கைத் தெளிப்பானை, மதுரை நகர காவல் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதத்திடம் வழங்கி அவர் பேசியது:
மதுரை நகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில், மாநகராட்சி சார்பில் வைட்டமின் மாத்திரைகள், கபசுரகுடிநீர் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. நகரில் கிருமி நாசினி கை தெளிப்பான் மூலமும் தெளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும், அவ்வப்போது பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஆலோசனையின் பேரில், மதுரை மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நோயை கட்டுப்படுத்த அரசு துரிதமாக செயல்பட்டாலும், பொது மக்கள் பங்கு முக்கியம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை