திருநெல்வேலி சந்திப்பு அருகே 10 கடைகளில் உள்ள பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக ஒருவரைப் பிடித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி சந்திப்பு மேம்பாலம் கீழே உள்ள சாலைக் குமரன் கோவில் அருகே பூக்கடை, வாட்ச், பல்பொருள்கள், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், இந்த கடைகளை அதன் உரிமையாளர்கள் சனிக்கிழமை காலை திறப்பதற்காக சென்ற போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து திருநெல்வேலி நகர குற்றப்பிரிவு காவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், திருநெல்வேலி நகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், காவலரகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், வாட்ச் கடை, எலக்ட்ரிக்கல் கடை, மருந்துக்கடை உள்ளிட்ட 10 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. மேலும் விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து திருநெல்வேலி மாநகர துணை ஆணையர்( குற்றம்}போக்குவரத்து) டி.மகேஷ் குமார் கூறுகையில், திருநெல்வேலி சாலைக் குமரன் கோவில் அருகே உள்ள சுமார் 10 கடைகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
இங்கு உள்ள சிசிடிவி கேமராக்கள், விரல்ரேகை ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துள்ளோம். இது தொடர்பாக திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறோம். மேலும், அப்பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.