நெல்லை மாவட்டத்தில் பட்டப் பகலில் வங்கி கிளர்க் வேலை பார்த்து வந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டது இந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது வெள்ளாங்குழி கிராமம். இங்குள்ளவர் சுடலை முத்துமணி இவரது மகன் இசக்கி சங்கர்(32). இவர் அருகே உள்ள களக்காடு மத்திய கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக வேலை செய்து வந்தார்.
வழக்கம் போல் இசக்கி சங்கர் இன்று காலை தனது கிராமத்தின் அருகிலுள்ள ஆற்றில் குளிப்பதற்காக சென்றிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரை விரட்டியுள்ளது. அவர்களிடம் இருந்து இசக்கி சங்கர் தப்பி ஓடியபோதும், அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டார். இந்நிலையில், சில நொடிகளில் அந்த கும்பல் படுபயங்கரமாக அவரது கழுத்திலும், தலையிலும் வெட்டியது. இதனால் இசக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இசக்கி சங்கரை வெட்டிய கும்பல், உடனே தப்பி ஓடிவிட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன் இசக்கி சங்கரின் உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இசக்கி சங்கர் தனது வீட்டின் அருகே உள்ள வேற்று சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டு வருடமாக காதலித்து வந்திருக்கிறார். இரண்டு பேரும் காதலர்களாக இருந்திருக்கிறார் கள். இவர்களின் காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் பல நாட்கள் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்களின் ரகசிய சந்திப்பு குறித்து பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரம், அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் இசக்கி சங்கரின் குடும்பத்தாருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்பே நடந்துள்ளது. அப்போதே சிலர் இருவர் குடும்பங்களிலும் தலையிட்டு சமாதானம் ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும் சமாதானப் பேச்சு நடத்தியவர்கள் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும்படி இரு குடும்பத்தாரிடமும் பேசி ஒப்புக்கொள்ள வைத்தனராம்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தில் பெண்ணின் தந்தைக்கு உடன்பாடு இல்லை என்று கூறப் படுகிறது. இருப்பினும், அந்த நேரம் அவர் இந்த உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது முடிவை பெண்ணின் உறவினர்கள் எதிர்த்துள்ளனர். காரணம் பெண்ணின் உறவினர் ஒருவரே இந்தப் பெண்ணை திருமணம் முடிக்க விரும்பினாராம்.
இந்நிலையில்தான் இன்று காலை இசக்கி சங்கரின் படுகொலை நடந்திருக்கிறது. விசாரணைக்காக போலீசார் அந்தப் பெண்ணின் தந்தையை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் இந்தப் படுகொலைச் சம்பவம் ஆணவக்கொலை காரணத்தாலா அல்லது ஒருதலைக் காதல் காரணமா அல்லது வேறு பகைமை காரணமா என வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப் பட்டு வருவதாக போலீஸார் கூறியுள்ளனர்.
இதேபோல் கடந்த 18ஆம் தேதி மேலப்பாலாமடை கிராமத்தில் பால்துரை என்ற இளைஞர் தலை துண்டாக வெட்டி எடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இன்று இசக்கி சங்கர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த படுகொலைகளால் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.