Home கேள்வி பதில் எம் கேள்விக்கென்ன பதில்? (நல்ல கண்ணுவுக்கு…)

எம் கேள்விக்கென்ன பதில்? (நல்ல கண்ணுவுக்கு…)

எம் கேள்விக்கென்ன பதில்? (நல்ல கண்ணுவுக்கு…)

  1. ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களுக்கு சற்றும் குறையாத அளவில் ஸ்டாலினாலும் மாவோவினாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஹிட்லர் தன் அழிவு சக்தியின் உச்சத்தில் இருந்தபோதே கொல்லப்பட்டதாலும் நாஜிகளின்கொடுமைகளுக்கு சர்வதேச விசாரணை வைக்கப்பட்டதாலும் ஹிட்ரின் உண்மை சொரூபம் உலகுக்குத் தெரிந்துவிட்டிருக்கிறது. ஸ்டாலினோ மாவாவோ அப்படித் தமது கொடுஞ்செயல்களின் உச்சத்தில் ஒடுக்கப்பட்டிருக்கவில்லை. அதற்குப் பிந்தைய தமது ஆட்சி காலத்தில் தமது அழிவுச் செயல்கள் அனைத்தின் தடயங்களையும் அழித்துவிட்டு நிம்மதியாக பல்லும் சொல்லும் போன கிழட்டு சிங்கமாக உயிர் துறந்திருந்தனர். எனவே உலகுக்கு அவர்களின் உண்மை சொரூபம் தெரிந்திருக்கவே இல்லை. ஆனால், ஒரு கம்யூனிஸ்டுக்கு இந்த உண்மைகள் நிச்சயம் தெரிந்திருக்கவேண்டுமே..? எப்படி உங்களால் இன்றும் கம்யூனிஸ்டாக இருந்துவர முடிகிறது?
  2. கீழ்வெண்மணியில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டுமே… பண்ணையார்களின் அடியாளைக் கொன்ற கம்யூனிஸ்ட்டுகள் அனைவருமே பண்ணையாரின் ஆட்கள் தாக்க வருவார்கள் என்று தெரிந்த நிலையில் சிட்டாகப்பறந்து தப்பித்திருந்தீர்கள். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகள், பெண்கள், முதியவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருக்கலாமே..? அவர்களை ஒற்றைக் குடிசைக்குள் பதுங்கித் தப்பும்படிவிட்டு விட்டு ஓடியது ஏன்? தஞ்சைக் கலவரங்களில் குடிசைஎரிப்புஎன்பது சர்வ சாதாரணமான தாக்குதல் என்பது தெரிந்தும் இப்படிச் செய்தது என்ன யுத்த தர்மம்?
  3. கீழ்வெண்மணிப் படுகொலைகளில் ஈடுபட்ட காங்கிரஸ்-திராவிடப் பண்ணையார்களுடனும் அவர்களைப் பாதுகாத்த திராவிட முன்னேற்றக் கட்சியுடனும் அரை சீட், கால் சீட் பேரத்துக்காகக் காவடி தூக்குவது நியாயமாகப்படுகிறதா..?
  4. கீழ்வெண்மணிப் போராட்டத்தின்போது பண்ணையார்கள் செங்கொடியை இறக்கு… கூலி உயர்வு பற்றி பேச்சுவார்த்தைக்கு வா என்று சொல்லி குறிப்பிட்ட அளவு நெல்லை அதிகரித்துக் கொடுத்துக் கூப்பிட்ட பிறகும் யாரையும் அறுவடை செய்ய விடாமல் தடுத்து, அடுத்த கிராம கூலியாட்களை விரட்டியடித்து, அவர்களை அழைத்து வந்த பண்ணையார் ஆளை அடித்துக் கொன்று போட்டது மிகப் பெரிய தவறு.

கம்யூனிஸ்ட்களின் இத்தகைய வன்முறை நடவடிக்கைகள்தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்று காந்தியவாதிகள் அல்ல… ஈ.வெ.ரா.வே சொல்லியிருப்பதென்பது கரடியே காறித் துப்பிய அவமானம் அல்லவா..? ஆதிக்க சக்திகளை எதிர்க்கிறேன் என்ற பெயரில் அதிகாரத்துக்கு வரும் கம்யூனிஸ்ட்கள் செய்த கொடூரங்கள் எல்லாம் ஆதிக்க சக்திகளே பரவாயில்லைஎன்று சொல்லும் அளவுக்கு இருப்பதென்பது எவ்வளவு வேதனையான விஷயம். கம்யூனிஸத்தின் அடிப்படையே இவ்வளவு பெரிய தவறுடன் இருக்கையில் அதை மறுபரிசீலனை செய்யவோ செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கவோ தோன்றவே இல்லையா?

  1. முதலாளிகளுடைய கொடுமைகளுக்கு எதிராகச் சற்றும் மனம் தளராமல் போராடிக் கொண்டே இருக்கும் நீங்கள் என்றேனும் ஒரே ஒரு நிறுவனம் அல்லது தொழிற்சாலையை நீங்கள் சொல்லும் பாட்டாளி நலனை மையமாகக் கொண்டு நடத்திக் காட்டியிருக்கிறீர்களா..?
  2. மக்கள் தொகையில் பத்து சதவிகிதம் இருக்கும் அரசுப் பணியாளர்கள்தான் மாநில வருவாயில் 60 சதவிகிதத்துக்கு மேல் சம்பளமாகப் பெறுகிறார்கள். சுமார் அறுபது சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் முறை சாரா, தனியார் தொழிலாளர்களுக்கு அரசின் வருமானத்தில் பத்து சதவிகிதம் கூடக் கிடைப்பதில்லை. உடைத்துச் சொல்லட்டுமா… உண்மைப் பாட்டாளிகளை இன்று சுரண்டுவது கேடு கெட்ட அரசாங்க அதிகாரவர்க்க தொழிற்சங்க கம்யூனிஸ்ட் கூட்டமே. நீங்கள் பேசுவது கம்யூனிஸம். பின்பற்றுவது அப்பட்டமான அயோக்கியத்தனமான முதலாளித்துவம். ஏனிந்த இரட்டை வேடம்?
  3. கல்விப் புலம் தொடங்கி அனைத்து அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருப்பது இடதுசாரிகளே… ஊடகங்களில் இன்று அப்பிக் கொண்டிருப்பதும் உங்கள் கூட்டமே… ஆனால், தமிழகத்தில் உங்களால் ஒரு எம்.எல்.ஏ. தேர்தலில் கூட வெல்ல முடிந்திருக்கவில்லை. உங்கள் கட்சி ஒற்றை இலக்கத்தை தாண்டி வென்றதில்லை. மக்களுக்காகக் கட்சி நடத்துவதாகச் சொல்லும் உங்களுக்கு மக்களிடம் மட்டும் துளிகூடச் செல்வாக்கே இல்லை என்பது கேவலம் இல்லையா..?
  4. உங்கள் கட்சியில் ஜாதி பார்ப்பதில்லை என்று சொல்கிறீர்கள். பொலிட் பீரோவில் இடம்பெற ஒரு தலித் கூட இதுவரை தகுதி பெற்றிருக்கவில்லையா..? வடக்கே பிராமண கம்யூனிஸ்ட்கள், தெற்கே தேவர் கம்யூனிஸ்ட்கள் தாண்டி சித்தாந்தம் மற்ற மக்களிடம் கொண்டுபோகப்படவே இல்லையா..?
  5. இரு பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்புக்கு சொத்துப் பிரச்னைதான் குறுக்கே நிற்பதாகப் பேசிக் கொள்கிறார்களே… என்ன தான் உண்மை?
  6. மேற்கு வங்காளத்துக்கு பங்களாதேஷில் இருந்து முதல்கட்டமாக பல அகதிகள் வந்தனர். அவர்கள் வரவேற்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். இரண்டாம் கட்டமாகவும் பலர் வந்தனர். ஆனால், இரண்டாவதாக வந்தவர்களுக்கு சரியான இடம்வழங்கப்படவில்லை. பாதிபேர் திருப்பி அனுப்பப்பட்டனர். போக மறுத்து தீவொன்றில் தங்கியவர்களுக்கு முதலில் உணவு தடுத்து நிறுத்தப்பட்டது.மருத்துவப் பொருட்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. சில மாதம் நீடித்த இந்த முற்றுகைக்குப் பின்னும் அவர்கள் போகவில்லை என்றதும் கம்யூனிஸ காவல் படை துவக்குகளுடன் உள்ளே நுழைந்தது. ஊடகத்தினரை வெளியேற்றியது.

அந்தத் தீவின் உச்சிக் கட்டடத்தில் செங்கொடி ஏற்றப்பட்டது. அதன் நிழல் விழுந்த தீவின் மண் செந்நிறமடைந்தது. தீவைச் சுற்றி ஓடிய நீர் செந்நீரானது… தஞ்சம் கேட்டு வந்த மக்களின் குருதியால் நனைந்தது அந்த பூமி. காரணம்… இரண்டாவதாக அடைக்கலம் தேடி வந்தவர்கள் தலித்கள்… தமிழர்களுக்குப் புரியும் வகையில் சொன்னால் பறையர்கள், பள்ளர்கள், அருந்ததியர்கள், சக்கிலியர்கள், வண்ணார்கள், தோட்டிகள். எங்கே போனது உங்கள் ஜாதி தாண்டிய வர்க்க பாசம்..?

  1. அம்பேத்கர் 1952 தேர்தலில் போட்டியிட்டபோது இரண்டு பெரிய சக்திகள் அவரை எதிர்த்தன. வீதி வீதியாகச் சென்று அவரைத்தோற்கடித்தன. ஒன்று: நேரு காங்கிரஸ்… இன்னொன்று உங்கள் கம்யூனிஸ்ட் கட்சி. அந்தத் தேர்தலிலும் அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தவர்கள் இந்துத்துவர்கள். தமது அன்றாட பிரார்த்தனைப் பாடலில் அம்பேத்கரை இந்து சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவராக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணங்கிவருகிறார்கள்.

வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின் சுமார் ஐம்பது ஆண்டுகள் வரை அம்பேத்கரை முற்றாக இருட்டடிப்பு செய்த காங்கிரஸும் இடதுசாரிகளும் சுமார் 2000க்குப் பின் அம்பேத்கர் மேல் திடீர் பாசத்துடன் பொங்கிப் பரவசப்படுவது ஏன்? இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றுக்கு இணையாக கடும் சொற்களால் கம்யூனிஸத்தையும் தானே அம்பேத்கர் நிராகரித்திருக்கிறார். இஸ்லாம், கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கங்கள், அம்பேத்கர், ஈ.வெ.ரா… இவ்வளவு ஏன் வன்முறையில் பிறந்து வன்முறையில் வளர்ந்து வன்முறையிலேயே மடிந்த இலங்கை விடுதலைப் புலிப்படைகூட இடதுசாரி தத்துவத்தை ஒதுக்கித் தள்ளத்தான் செய்திருக்கின்றன. ஆதிக்க சக்திக்கு உண்மையான மாற்றாக இருந்திருந்தால் இந்த இழிவு ஏற்பட்டிருக்குமா..? இன்று இத்தனை மதியார் தலை வாசலிலும் குத்த வைத்து உட்கார்ந்திருப்பதன் மூலம் இனியும் எதைத்தான் சாதிக்க முடியும் உங்களால்?

  1. இஸ்லாமிய நாடுகளில் செங்கொடியைப் பறக்கவிடுவேன் என்று மார்தட்டிப் பேச உங்கள் செம்படையில் இருந்து சிலரை அனுப்பித் தருகிறீர்களா..? அல்லது சீனாவுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் சிலரை அழைத்துச் சென்று ”எனக்குக் கிடைத்திருக்கும் நல் வாழ்க்கைக்கு சீன அரசாங்கமே காரணம்… அல்லா அல்ல’ என்று உறுதிமொழி எடுக்க வைக்கும் கண்கொள்ளாக் காட்சியை காட்டுகிறீர்களா..?

இத்தனைக்கும் பாகிஸ்தானின் ஓரமாக இருக்கும் சீனப் பகுதியில் சொற்பமாக ஊடுருவ ஆரம்பித்திருக்கும் இஸ்லாமியர்களுக்கே இந்தக் கட்டுப்பாடு. கேட்க மறந்துவிட்டேன்… தமிழக கம்யூனிஸ்ட் கட்சியில் எத்தனை முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள்?

  1. மேற்குலகில் கம்யூனிஸ்ட் என்றாலே அவர் தவிர்க்க முடியாமல் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மேல்கடும் விமர்சனங்கள் வைப்பவர் என்றுதான் அர்த்தம். இந்தியாவில் இந்து மதம் ஆதிக்க சக்தி என்பதை வாதத்துக்கு ஒத்துக்கொள்வோம் (ஏனென்றால், இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கையில் மட்டுமே அதிகம்). அந்த ஆதிக்க மதத்தை எதிர்க்க அதைவிட வல்லாதிக்க மதத்தைத் துணைக்கழைப்பது சரியாகுமா..? நாயை விரட்ட ஓநாயை நட்பாக்கிக்கொள்ளலாமா..?
  2. இந்துத்துவம் சுதேசியை, உள்ளூர் பாட்டாளிகளை ஆதரிக்கிறது. கம்யூனிஸமும் கொள்கையளவில் பாட்டாளி நலனையே பேசுகிறது. அப்படியானால், மேற்கத்திய கார்ப்பரேட்கள்தானே இருவரின் பொது எதிரி. இந்துத்துவர்களே எமது பரம விரோதி என்று நீங்கள் சொல்வதன் மூலம் கார்ப்பரேட்களின் மறைமுகக் கைக்கூலியாகத்தானே ஆகிறீர்கள்?
  3. எல்லாம் படங்களில் சிவப்பு துண்டு அல்லது கர்ச்சீப் கட்டிக் கொண்டு கம்யூனிஸம் பேசுகிறர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, கோடிகளைக் கொள்ளையடித்துச் செல்பவர்களுக்கு விழா எடுத்து மாலை அணிவித்து மகிழ்கிறீர்களே… அவர்கள் திரையில் கம்யூனிஸ்டாக நடிப்பதுபோலவேதான் நீங்களும் நிஜத்தில் நடிக்கிறீர்களா..?
  4. டிஜிட்டல் பணப் பரிமாற்றம் வந்ததைத் தொடர்ந்து மக்களுக்கு அரசின் பண உதவிகளை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கிலேயே தர முடிகிறது. ஆதார், பேன் கார்டு போன்றவற்றை அமல்படுத்தியதன் மூலம் அரசுத்திட்டங்களில் நடக்கும் முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பினாமி சொத்துக் குவிப்பு மட்டுப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தத் திட்டங்கள், துறைகளில் நடந்து வந்த ஊழல் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது. எளிய மக்களின் பொருளாதார நலனில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் மத்திய அரசின் இந்தத் திட்டங்களை நீங்கள் வரவேற்றுத்தானே இருக்கவேண்டும்?
  5. விவசாயக் கடன் தள்ளுபடி என்ற விவகாரத்தில் ஏழை விவசாயியைக் காட்டி பண்ணையார்களே கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள் என்பது வேறு எந்தக் கட்சியைவிடவும் உங்களுக்கே நன்கு தெரிந்திருக்கும். இருந்தும் லட்சாதிபதிகளுக்கு, உங்களுக்குப் புரியும்வகையில் சொல்வதென்றால், வெண்மணி கோபால கிருஷ்ண நாயுடுவகையறாவுக்குக் கடன் தள்ளுபடி கேட்பதுதான் உங்கள் லட்சியமா..?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version