மாறி வரும் அரசியல் சூழ்நிலையில், நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தை முன் வைத்து மேலும் மேலும் அரசியல் செய்வது தேச துரோகப் பேச்சுக்களின் பட்டியலை இன்னும் பெரிதாக்கிக் கொண்டு விடும் என்று யார் சொன்னார்களோ…?! வைகோ திடீரென்று நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தை ஒத்திவைத்திருக்கிறார்.
ஏற்கெனவே தேசவிரோத பேச்சுக்களால் நீதிமன்ற தண்டனையை எதிர்கொண்டு, பின்னர் மாநிலங்களவை உறுப்பினரும் ஆகி விட்ட நிலையில், வைகோ அதையே மாநிலங்களவையிலும் தொடர்ந்தார். காஷ்மீர் விவகாரத்தில் அவர் தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதுவும் தேசவிரோதக் கருத்துகளாகவே நாடு முழுதும் பேசப்பட்டது.
இந்நிலையில், திமுக.,வைச் சேர்ந்த சரவணன், ரிபப்ளிக் டிவி விவாதத்தில் பேசிய போது, காஷ்மீர் இந்தியாவின் அங்கமாக இருந்ததே இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறி, தேசிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப் பட்டு, மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் அனுப்பப் பட்ட 38 உறுப்பினர்களும் வைகோ உள்ளிட்டவர்களும் தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலையைப் பிரதிபலிப்பவர்கள் அல்லர்..! அவர்கள் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டையே, கூட்டணியின் நிலைப்பாட்டையே பிரதிபலிப்பவர்கள் ஆவர். என்றாலும், தேசிய அளவில், தமிழகத்தைக் குறித்த மோசமான பார்வைக்கு இவர்கள் வித்திட்டுள்ளனர்.
இந்நிலையில் சரவணன் பேச்சு குறித்து இப்போது புகார்கள் பல எழுப்பப் பட்டு கொடுக்கப் பட்ட நிலையில், வைகோவின் மீதும் பலர் புகார் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக வைகோ தனது அரசியல் நடவடிக்கைகளை ஒத்தி வைத்துள்ளதாகக் கூறப் படுகிறது. அதற்காக, மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் வைகோ இருப்பதால், 20,21,22 ஆகிய நாள்களில் வைகோ, தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுகின்றது என்று மதிமுக., தரப்பில் கூறப் பட்டுள்ளது.
மேலும், உடல்நலக்குறைவால் மதுரை அப்பலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதிக்கப் பட்டுள்ளார் என்றும் கூறப் பட்டுள்ளது.
அட… என்ன கொடும ‘சரவணா’ என்று இப்போது நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
முன்னதாக, உடல் நலக் குறைவால் மதுரை அப்பலோ மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆவதற்கு முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டி…
காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சென்னையில் நடை பெற உள்ள அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடிய வில்லை.
நீதிமன்றத்தை நாடி நீதிமன்றம் அனுமதியின் பேரில் பரூக் அப்துல்லாவை சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைப்பேன்… என்றார் வைகோ.