பிரதமர் அமெரிக்க நிகழ்ச்சிகள் குறித்த கால அட்டவணையை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப் வெளியிட்டார்.
அதில் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.
இந்திய நேரப்படி இன்று (செப்.,24) அதிகாலை அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றார். அங்கு விமான நிலையத்தில் கூடி இருந்த இந்திய வம்சாவளியினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி இரண்டாவது முறையாக தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா வந்துள்ள மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த அமெரிக்க வாழ் பட்டேல் சமூகத்தின் ஒரு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதே சமயம், மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பட்டேல் சமூகத்தினரின் மற்றொரு பிரிவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் ஸ்வரக்ஷப் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது : பிரதமர் மோடி கலிபோர்னியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கலிபோர்னியாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
மோடி, கூகுள் நிறுவன அலுவலகத்திற்கு சென்று, பல்வேறு துறைகளில் அவர்கள் மேற்கொண்டு வரும் கண்டுபிடிப்புக்களை பார்வையிட உள்ளார். அது டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவிகரமாக இருக்கும் என அவர் கருதுகிறார். 2004ம் ஆண்டிற்கு பிறகு இப்போது தான் அமெரிக்காவில் ஜி4 மாநாடு நடக்கிறது. செப்டம்பர் 26ம் தேதி நடக்கும் இந்த மாநாட்டில் மோடி கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக செப்டம்பர் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஐ.நா., கூட்டத்தில் மோடி பேச உள்ளார். இதில் இந்தியாவின் நீண்டநாள் கனவான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 26ம் தேதி ஜி4 மாநாட்டு தலைவர்களை சந்திக்கிறார். பின்னர் இந்திய வம்சாவளியினருடன் பகல் உணவு சாப்பிட உள்ளார். டெல்சா மோட்டார்ஸ் தலைமையகத்திற்கும் அவர் செல்ல உள்ளார். தொடர்ந்து ஆப்பிள் நிறுவன சிஇஓ.,க்கள் மற்றும் இந்திய வம்சாவளி சிஇஓ.,க்களையும் சந்திப்பதுடன், அவர்களுடன் இரவு உணவருந்த உள்ளார்.
செப்டம்பர் 27ம் தேதி சான் ஜோஸ் நகரின் இந்திய வம்சாவளியினரிடையே இந்தியா-அமெரிக்க தொடர்பு குறித்து பேச உள்ளார். அங்கு ஸ்டான்ட்போர்ட் பல்கலைகழகத்தில் புதுப்பிக்கதக்க ஆற்றல் குறித்த வட்டமேடை மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் பேஸ்புக் தலைமை அலுவலகத்திற்கு சென்று அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கை சந்திக்க உள்ளார்.
செப்டம்பர் 28ம் தேதி ஐ.நா., அமைதி மாநாட்டில் பேசும் மோடி, அன்றைய தினம் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க உள்ளார். அதேசமயம் இந்த பயணத்தின் போது பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்கும் திட்டமில்லை. மோடியும், ஷெரீப்பும் ஒரே ஹோட்டலில் தங்கினாலும் இருதரப்பு பிரதமர்கள் சந்திப்பு குறித்த திட்டம் இல்லை என விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.