அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை!
தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி நிர்மலாதேவி தாக்கல் செய்த மனுவில், தனி நீதிபதி தண்டபாணி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மீது வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யப் பட்டார். மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், இந்நிலையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். முன்னர் ஜாமீன் மறுக்கப் பட்ட நிலையில், இன்று அதிரடியாக அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவினைப் பிறப்பித்தது.
மாணவிகளை தவறாக நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குறித்த பேட்டிகள், கட்டுரைகள் நக்கீரன் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகி, உள்நோக்கம் கொண்டவையாக குற்றம் சாட்டப் பட்டன. அரசின் மீதும், ஆளுநர் மீதும் களங்கம் கற்பிக்கும் விதத்தில் கட்டுரைகள் எழுதப் பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நிர்மலா தேவி ஜாமீனில் வெளியில் வந்தால், அவரை வைத்து ஊடகங்களில் மேலும் தேர்தல் அரசியலை திமுக., சார்பு ஊடகங்கள் மேற்கொள்ளும் என்று கூறப்பட்ட நிலையில், நிர்மலா தேவி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிர்மலாதேவி செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது சாட்சியங்களை கலக்கக்கூடாது என்று சில நிபந்தனைகளோடு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி, 331 நாட்கள் சிறையில் இருந்தார். இதே வழக்கில் சிறையில் இருந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தனர்