Home Reporters Diary குற்றாலம் சுற்றி… கும்பிடவும் குதூகலிக்கவும் உள்ள இடங்கள்!

குற்றாலம் சுற்றி… கும்பிடவும் குதூகலிக்கவும் உள்ள இடங்கள்!

தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி.

உள்ளூர்வாசிகள் திருக்குற்றாலம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். காரணம் இது வெறும் சுற்றுலாத் தலம் என்பதை விட, மிக முக்கியமான ஆன்மிகத் தலமாகவும் விளங்குவதால்… பாடல் பெற்ற தலம் இது!

மாசி, பங்குனி, சித்திரை தற்போது கோடைக்காலம். இந்த நேரத்தில் குற்றால அருவிகளில் தண்ணீர் விழாது. இருக்கும் நீரையும் குடிநீர் திட்டத்துக்காக எடுத்துக் கொண்டுவிடுவார்கள்.

வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டுருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும். குறிப்பாக, மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் தொடங்கும் சீஸன் நேரத்தில் குற்றாலம் வர திட்டமிடுபவர்கள் முன்னதாக திட்ட மிட வசதியாக சில தகவல்களை இங்கே தருகிறோம்.

1.குற்றாலத்தில் உள்ள அருவிகள்
2.அருகில் உள்ள மற்ற சுற்றுலாத்தளங்கள்
3.பார்க்க வேண்டிய இடங்கள்
4.குற்றாலத்தின் சிறப்புகள்
5.குற்றாலம் அருகில் உள்ள சில கோவில்கள்
6.குற்றாலத்துக்கு வருவது எப்படி

ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலை, குளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கி விடும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழையால் கடும் பனி மற்றும் சில நேரங்களில் கன மழை என சுற்றுசூழல் மாறிவிடும். அந்நேரம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அதிகரிப்பதால் மக்கள் குளிக்க சில நேரங்களில் அனுமதிக்க படுவதில்லை.

குற்றாலத்தில் உள்ள அருவிகள்
குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன.

1)பேரருவி ( MAIN FALLS ), இது 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவி, இடையில் பொங்குமாகடலால் அழுத்தம் தடைப்பட்டு, மக்கள் குளிக்க பாதுகாப்பான வகையில் குறைந்த தாக்கத்தை தருகிறது.

2) சிற்றருவி (CHITRARUVI), இங்கு நீரின் அழுத்தம் குறைந்தே காணப்படும், இதன் வழியே தா ன் செண்பகாதேவி மற்றும் தேனருவிக்கு செல்ல முடியும்.

3) செண்பகாதேவி அருவி ( SHENBAGADEVI FALLS ) செண்பக மரங்கள் வழியாக பாய்கிறது. அங்கு செண்பகாதேவி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது.

4) அங்கிருந்து 3 கீ.மீ தூரத்தில் தேனருவி ( THENARUVI ) உள்ளது. இரண்டு பெரிய கற்கள் இடையே 40 மீட்டர் உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி தொடங்குகிறது.

5) ஐந்தருவி ( AINTHARUVI ) இவ்வனைத்திலும் மாறுபட்ட அருவியாகும். இங்கு ஐந்து தனித் தனி அருவிகள் உள்ளன.

6) இந்த அருவிக்கு மேலே பழத்தோட்டம் அருவி ( PAZHATHOTTA ARUVI ), அல்லது விஐபி அருவி இருக்கிறது.

7) பழைய குற்றாலம் அருவி ( PAZHAYA COURTALLA ARUVI ) இரண்டு பாறைகள் இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து விழுகிறது. இடையில் இது மூடப்பட்டு பின் நீரின் போக்கை மாற்றி குளிப்பதற்கு ஏதுவாக பாறைகள் செதுக்கபட்டபின் மீண்டும் திறக்கப்பட்டது.

8) புலி அருவி ( PUZHIARUVI ) செயற்கையாக உருவாக்கப்பட்டது. இவ்வருவியின் நீர் பாசனத்திற்காக திருப்பிவிடப் படுகிறது

9) ஐந்து அருவி மேலே அரசு தோட்டக்கலை பூங்காவில் ஒரு சிறிய அருவி உள்ளது, ஆனால் அது பொது வரம்புக்குள் இல்லை.

அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்:

1) தெற்குமலை எஸ்டேட் – தேனருவியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.

2) ஐந்து அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவி அருகில் உள்ள படகு சவாரி.

3) பேரருவி அருகில் உள்ள பாம்பு மற்றும் மீன் பண்ணை

4) சிறு குழந்தை பூங்காக்கள்.

குற்றாலத்தின் சிறப்புகள்:

1) குற்றாலம் அருவிகள் சார்ந்த இடம் மட்டும் அல்ல, தெய்வீகமான இடமும் கூட. சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரா சபை, இங்கு தான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பல இங்கு உள்ளது.

2) தமிழ் கவிஞர் திருகூடராசப்ப கவிராயர் இதன் உச்சத்தை தனது குற்றால குறவஞ்சியில் பாடியுள்ளார்.

3) மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் இந்து சமய பாரம்பரியபடி சங்கு வடிவம் உள்ளது சிறப்பு.

குற்றாலம் அருகில் உள்ள சில கோவில்கள்:

1) பேரருவியில் உள்ள திருகுற்றாலநாதர் கோவில். சித்திரை மாதம் முழு நிலவின் போது பத்து நாள் சிறப்பு பிரார்த்தனை இங்கு நடைபெறும். அடுத்து, வாகன நிறுத்த இடத்தின் அருகிலேயே உள்ள சித்திர சபை. இது சிவபெருமானின் பஞ்ச நாட்டிய சபைகளில் ஒன்று. பெருமான் சித்திர வடிவில் நடனமாடிய முக்கியத் தலம். அருமையான ஓவியங்கள். பழங்கால மூலிகை ஓவியங்கள். தெய்வத் திருவுருவங்கள் வடிக்கப்பட்ட அழகே கொள்ளை அழகு. பார்த்து அனுபவிக்கலாம். நன்றாக பராமரிக்கிறார்கள்.

2) செங்கோட்டையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருமலைக் குமார சாமி திருக்கோவில். அழகான குன்றின் மீது நின்ற கோலக் குமரன் கோவில். சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலை தொட்டுத் தழுவும் இடம். மேகக் கூட்டங்கள் ஒட்டி உரசிச் செல்லும் அனுபவம் சிறப்பானது. அதில் இருந்து 3 கி.மீ. முன்னதாக உள்ள பண்பொழியில் குமரனுக்கு அடிவாரக் கோயில் அமைந்துள்ளது.

3) இலஞ்சியில் உள்ள குமரன்கோவில், குற்றாலத்திலிருந்து 1 கிமீ.

4) தென்காசியில் உள்ள காசிவிசுவநாதர்கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 5 கிமீ.

5) புளியரையில் உள்ள தக்ஷிணாமூர்த்தி கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 14 கிமீ.

6) பாபநாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், குற்றாலத்திலிருந்து 35 கி.மீ.

7) ஆரியன்காவு ஐயப்பன் கோவில், குற்றாலத்திலிருந்து 22 கிமீ. செங்கோட்டையில் இருந்து 16 கி.மீ.

8) ஐயப்பனின் தலமான அச்சங்கோவில், செங்கோட்டையில் இருந்து 26 கி.மீ.,

அருகில் உள்ள மற்ற சுற்றுலாத்தலங்கள்:

1) பாலருவி – கேரளாவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.
2) பாபநாசத்தில் உள்ள பாபநாசம் ஆறு, குற்றாலத்திலிருந்து இருந்து 35 கிமீ.
3) அகஸ்தியர் அருவி – பாபநாசம் அருகே உள்ளது.
4) பாணத்தீர்த்தம் அருவி – பாபநாசம் அருகே உள்ளது.
5) பாபநாசம் (லோயர்) அணை – பாபநாசம் அருகே உள்ளது.
6) பாபநாசம் (உயர்), காரையார் அணை – பாபநாசம் அருகே உள்ளது.
7) சேர்வலார் அணை – பாபநாசம் அருகே உள்ளது.
மணிமுத்தாறு அணை – பாபநாசம் அருகே உள்ளது.
9) களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் – பாபநாசம் அருகே உள்ளது.
10) மஞ்சோலை எஸ்டேட், மணிமுத்தாறு எஸ்டேட் & ஊத்து எஸ்டேட் – பாபநாசம் அருகே உள்ளது. இவ்வனைத்தும் 2300 முதல் 4200 அடி வரை அமைந்துள்ளன.

குற்றாலத்துக்கு வருவது எப்படி:

சாலை மூலமாக: சாலை வழியில் குற்றாலத்திலிருந்து பல்வேறு இடத்திற்கான தூரம்:
மதுரை: 160 கி.மீ.
திருநெல்வேலி: 59 கி.மீ
தென்காசி: 5 கி.மீ
செங்கோட்டை: 5 கி.மீ
மதுரை விமான நிலையத்தில் இருந்து: 160 கி.மீ
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து: 120 கி.மீ
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து: 110 கி.மீ

தென்காசி மற்றும் செங்கோட்டையில் இருந்து குற்றாலம், பஸ் போக்குவரத்து மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து செங்கோட்டை வரும் பேருந்துகளாலும், திருநெல்வேலியில் இருந்து தென்காசி மற்றும் செங்கோட்டை வரும் பேருந்துகளாலும் குற்றாலத்தை அடையலாம். மேலும் கேரளா மாநிலம் புனலூரில் இருந்து செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் மூலவும் குற்றாலத்தை அடையலாம்.

தொடர் வண்டி மூலமாக:
குற்றாலத்தில் தொடர் வண்டி நிலையம் இல்லை, ஆனால் செங்கோட்டை மற்றும் தென்காசி நிலையத்தில் இருந்து இருபது நிமிடங்களில் குற்றாலத்தை அடையலாம்.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தொடர் வண்டிகள்..
பொதிகை எக்ஸ்பிரஸ்: செங்கோட்டை – சென்னை, சென்னை – செங்கோட்டை
பயணிகள் வண்டி: செங்கோட்டை – மதுரை, மதுரை – செங்கோட்டை, சென்னை-கொல்லம், கொல்லம்-சென்னை
பயணிகள் வண்டி: செங்கோட்டை – திருநெல்வேலி, திருநெல்வேலி – செங்கோட்டை
பயணிகள் வண்டி: செங்கோட்டை – கொல்லம், கொல்லம் – செங்கோட்டை
சில நேரங்களில் சென்னை, ஈரோடு மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு வண்டிகள் தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படுகின்றன.

தகவல் தொகுப்பு: தென்காசி டைம்ஸ்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version