மக்களவைத் தேர்தலில் பெற்ற படுதோல்வியை அடுத்து, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுவார் என்று அனுமானங்கள் உலவின.
அப்போதே, இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கை! காங்கிரஸ் என்றால் அது ராகுல்தான், ராகுலை மீறி காங்கிரஸ் தலைமைப் பதவியெல்லாம் மற்றவருக்கு சென்றுவிடாது என்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர் பலர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் பதவி குறித்து கிண்டல் அடித்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடப்போகிறது. அதில் ராகுல் தன் ராஜினாமா கடிதத்தை, தன்னிடமே கொடுப்பார். அந்தக் கடிதம் அவராலேயே நிராகரிக்கப்படும்.
‘தேர்தல் தோல்விக்கு, ராஜினாமா தீர்வல்ல’ என்று ராகுலே கூறுவார். இதன்பின் ராகுல் தலைவர் பதவியில் தொடரும்படி, தனக்கு தானே கூறுவார். அதை ராகுல் ஏற்றுக் கொள்வார்.. என்று கிண்டல் செய்யப் பட்டிருந்தது. அதே போன்று காங்கிரஸ் காரியக் கமிட்டியில் ராகுல் ராஜினாமா நாடகம் குறித்தபடி நடந்தது.
முன்னர், சோனியா காந்தி பிரதமர் ஆக முயற்சி செய்த போது, அவர் வெளிநாட்டுக்காரர் என்பதால் கூடாது என்று எதிர்க்கட்சிகள் ஒன்றாக நின்றன. அப்போது தனக்கு பதிலாக மன்மோகன் சிங்கை அமரவைத்து, காங்கிரஸ் தலைமைப் பதவியை தானே வைத்துக் கொண்டார்.
அதற்கு முன்னர் நரசிம்ம ராவுக்குப் பின்னர் 1996ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அப்போது, சீதாராம் கேசரி தலைவராக இருந்தார். அந்த நேரம் கட்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வெளியேறி வந்தனர். மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட், மம்தா பானர்ஜி, ஜி.கே.மூப்பனார், பி.சிதம்பரம், அர்ஜுன் சிங், என்.டி.திவாரி என பலரும் வெளியேறினர். அப்போது ஜெயந்தி நடராஜன் வெளிப்படையாக சீதாராம் கேசரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
இந்நிலையில் சோனியா தலைவரானார். ஆனால், பின்னர் 1999ல் அவரே பிரதமர் ஆக முயற்சி செய்த போது, அவரது வெளிநாட்டு பிறப்பைக் காரணம் காட்டி, காங்கிரஸ் தலைவர்களான சரத் பவார்,பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் தடுத்த போது, சோனியா தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது இம்மூவரும் காங்கிரஸில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினர்.
அதன் பின்னர் அடுத்த இரு மாதங்களுக்குள் மீண்டும் காங்கிரஸ் தலைவராகி, தொடர்ந்து 133வது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆனார்.
அதே போன்ற நாடகம் இப்போதும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தின் போது நடந்தது. இம்முறை நாடகத்தின் நாயகன் ராகுல் காந்தி.
இந்த நாடகத்துக்கான ஸ்கிரிப்டைக் கொடுத்தவர்தான் நித்தியானந்தா. அவரது ‘மீ’ என்ற பேச்சு மிகப் பிரபலம். அதுதான் ராகுலுக்கு இப்போது கைகொடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்துவருகின்றனர்.