இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்களிடமோ அல்லது சேர்ந்து செல்லும் பெண்களிடமோ தவறான முறையில் நடக்க முயலும் ஆண்களுக்கு பாடம் புகட்டும் வகையில் புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது கேரளா.
இரவு நேரங்களில் நடந்து செல்லும் பெண்களை சீண்டுபவர்களைக் கண்டுபிடித்து உடனே சிறைக்கு அனுப்பும் பெண்களின் ‘நைட் வாக்’ திட்டத்தை வரும் 29-ம் தேதி முதல் அமல்படுத்துகிறது கேரளா.
இரவு 11 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை பெண்களின் நைட் வாக் என்ற இரவில் நடமாடும் நிகழ்ச்சி நிர்பயா தினமான வரும் 29-ம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த திட்டத்தின்படி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள நூறு மையங்களில் இரண்டு, மூன்று பெண்கள் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்வார்கள். அவர்களை 200 மீட்டர் தொலைவில் இருந்து 25 பேர் கொண்ட தன்னார்வ தொண்டர்கள் கண்காணிப்பார்கள்.
இந்த குழுவில் காவல்துறையினர், குடியிருப்போர் சங்கத்தினர், பெண்கள் முன்னேற்றத்திற்கான குடும்பஸ்ரீ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.
இரவில் நடமாடும் பெண்களிடம் யாரவாது அத்துமீற முயன்றால் உடனடியாக அவர்களை பிடித்து காவல்துறையில் ஒப்படைப்பார்கள். கைது செய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு வாரமும் நைட் வாக் நிகழ்ச்சி நடைபெறும். என்று, எந்த பகுதில் நைட் வாக் நிகழ்ச்சி நடக்கிறது என்பது ரகசியமாக வைக்கப்படும்.
எந்த பகுதியில் நைட் வாக் செய்வது என்பதை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த நிகழ்வு நடத்துவதன் மூலம் இரவு நடந்து செல்லும் பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் எண்ணம் உள்ளவர்களுக்கு அச்சம் ஏற்படும்.
பெண்கள் தைரியமாக நடமாடுவதை உறுதி செய்ய முடியும் என்கிறார்கள்.
இந்த திட்டம் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறுகையில்,
“பொது இடம் எனக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் இந்த ‘நைட் வாக்’ திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இரண்டு நோக்கங்கள் உள்ளன.
இரவு தெருக்களில் நடந்து செல்லும் பெண்களுக்கு மனதில் ஏற்படும் பயத்தை போக்குவது திட்டத்தின் முதல் நோக்கமாகும்.
இரவு பெண்கள் நடந்து சென்றால் அவர்களைத் தொந்தரவு செய்யும் எண்ணத்துடன் சிலர் உள்ளனர்.
இந்த திட்டம் டிசம்பர் 29-ம் தேதி தொடங்கி வாரம்தோறும் 100 பகுதிகளில் செயல்படுத்தப்படும். நானும் நைட் வாக் நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன்” என்றார்.
இந்த திட்டம் வெற்றிபெற்றால், இரவில் பெண்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் நடமாடும் அளவுக்கு நிலைமை மாறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.கேரள மக்கள்