திருவள்ளுவர் தினத்தை அரசியல்வாதிகள் இன்று கொண்டாடி வருகின்றனர். தாங்களும் அரசியல் ரீதியாக தமிழுக்கும் தமிழருக்கும் மதிப்பளிப்பதாக காட்டிக் கொள்வதற்காகவே திருவள்ளுவர் தினத்தை இன்று அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆங்கிலேயர்களின் மிச்சமாய் கிறிஸ்துவ மத பரப்புதலுக்காக, தமிழ் மண்ணின் பாரம்பரிய ஆன்மிக அடையாளங்களை அழிப்பதற்காக, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி திமுக., ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர் அடையாளங்களை அழித்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக, திருவள்ளுவரின் ஜன்ம நட்சத்திரமான வைகாசி அனுஷ நட்சத்திரத்தை மாற்றி, தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் பிறந்த தினம் கொண்டாடப் படும் என்று கூறி, தை மாத இரண்டாம் நாளை திணித்தார்கள்.
அந்த அடிப்படையில் இன்று திராவிட இயக்கங்களின் அரசுகள் சார்பில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் வாதிகள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்
இன்று காலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு காவி உடையில் உள்ள திருவள்ளுவர் படத்தைப் பதிவு செய்து, பின்னர் திமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதற்காக வெள்ளை உடையில் உள்ள திராவிடத் திருவள்ளுவரை பதிவு செய்தார். இதன் மூலம் திருவள்ளுவரின் இயல்பான முகத்தைக் கூட காட்ட இயலாத நெருக்கடி நிலைக்குத் தள்ளியிருக்கும் திராவிட இயக்கங்களின் பித்தலாட்டங்களுக்கு இரையானார் வெங்கய்ய நாயுடு. இவரது இந்தச் செயல், தமிழகத்தில் உள்ள தேசியவாதிகள் மற்றும் உண்மைத் தமிழர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது .
இந்நிலையில், பிரதமர் மோடி தன் பங்குக்கு மிக மெதுவாக, திருவள்ளுவர் தின வாழ்த்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், மிகவும் எச்சரிக்கையாக, திருவள்ளுவர் படத்தைப் பதிவு செய்யாமல் வாழ்த்தை மட்டும் பதிவு செய்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன. – என்று மோடி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.