இப்போது நாட்டில் பரவலாக மக்களை எல்லாம் கொரோனா பயம் பிடித்து ஆட்டுகிறது. சாதாரணமாகவே உணர்ச்சி வசப் படும் மக்கள் இப்போது, கொரொனாவுக்கு மருந்து இல்லை, உயிர் போய்விடும் என்றெல்லாம் பரப்பப் படும் தகவல்களைப் பார்த்து ரொம்பவே அதிர்ந்து போயுள்ளனர். தங்களுக்கும் இது போன்று வைரஸ் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி, இப்போது கணினி வழி பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோர் ஒரு மோசடியினைச் செய்து வருகின்றனர். இது குறித்து இணையதள குற்றங்களை கண்காணிக்கும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து உங்களைத் காத்துக் கொள்வது எப்படி, உங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா, கொரோனாவுக்கு சிகிச்சை என்ன? இப்படியெல்லாம் மக்களைத் தூண்டில் போட்டு சுண்டியிழுக்கும் கேள்விகளால் சில மால்வேர் ஃபைல்களை அனுப்பி வருகின்றனராம்.
இணையத்தில் அதிகமாக கொரோனா குறித்து தேடுபவர்களின் தன்மைக்கு ஏற்ப, அவர்களது இமெயில் முகவரிக்கோ, மொபைல் போன்களுக்கோ, குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக் இன்பாக்ஸ் அட்டாச்மெண்ட் வடிவிலோ வரும். அதனைத் திறந்து பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இது போன்ற ஃபைல்களில் மால்வேர்கள் பதியவைத்து அனுப்பப் படுவதாகவும், கம்ப்யூட்டர், மொபைல் போன்களில் உளவு பார்க்கவும், தகவல்களை திருடவும் இவற்றை அவர்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த பிடிஎஃப் ஃபைல்களை திறந்து பார்த்தால் அதில் ஒன்றும் இருக்காது என்றும், ஆனால் அவ்வாறு திறந்து பார்ப்பதன் மூலம் அந்த மால்வேர்கள் உங்கள் கணினியிலோ, மொபைல் போன்களிலோ பதிய வைத்து, அவற்றின் மூலம் முக்கியத் தகவல்கள் திருடப் படுமென்றும் எச்சரிக்கின்றனர். எனவே எச்சரிக்கையாக இருங்கள்!