“Vedas are blabbering of un educated folks…”
“படிப்பறிவில்லாத மாடு மேய்ப்பவர்களின் உளறலே வேதங்கள்” – அப்படியா?!
1839 ல் மெக்காலே என்ற ஜெர்மன் நாட்டு மேதாவி மாக்ஸ்முல்லரைச் சந்தித்தார். அவருக்கு ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரும் வேலையை ஒப்படைத்தார். ஈஸ்ட் இண்டியா கம்பனி அதற்காக ஒரு லட்ச ரூபாய் அளிப்பதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆங்கில மொழிபெயர்ப்பை படித்த ஹிந்துக்களுக்கு வேத தர்மம் மீதுள்ள சிரத்தையும் பிடிப்பும் அழிய வேண்டுமென்ற தன் மனதில் உள்ள சதித் திட்டத்தையும் வெளிப்படுத்தினார்.
மாக்ஸ்முல்லர் தன் மனைவிக்கு எழுதிய பிரபலமான கடிதத்தில் அந்த சதித்திட்டத்தை வெளியிட்டார். “நான் செய்யும் இந்த வேத மொழிபெயர்ப்பு மூலமும், நடக்கும் மதமாற்றம் மூலமும் பாரதத்தின் வளர்ச்சியும் மலர்ச்சியும் பெரிய அளவில் வீழ்ச்சி அடைய போகிறது”.
அதன் பயனாக மேற்கத்திய உலகம் மட்டுமல்ல. ஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்கள் கூட வேத நூல்களின் மீது நிராகரிப்பு மனப்பான்மையை மேற்கொண்டார்கள். பிரிட்டிஷாருக்கு ஊழியம் செய்வதே கௌரவம் என்ற எண்ணம் கொண்டவர்களால் பாரத நாட்டின் மேதைமை அன்றைய ஆட்சியாளர்களுக்கு நன்கு உபயோகப்பட்டது.
நம் நாட்டில் வேத நூல்களில் விஞ்ஞான அம்சங்கள் குறித்து ஆராய்ச்சிகள் நிறுத்தப்பட்டதால் பிற நாட்டவர் அவற்றைப் பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள். உதாரணம் ஜெர்மனி.
“அனைத்தும் வேதங்களில் உள்ளன போலும்…!” என்று ஏளனம் செய்யும் மேதாவிகளுக்கு அன்றும் இன்றும் குறைவே கிடையாது.
வேதங்களில் உள்ள விஞ்ஞான கருத்துக்கள் மீது ஆய்வு நடத்தினால் புதிய விஞ்ஞானக் கருத்துக்களுக்கு பலம் அதிகரிக்கும். வேதங்கள் பயனற்றவை என்றும் அவற்றை படித்தறிவது வீண் வேலை என்றும் பிரச்சாரம் செய்ததால் வேதங்கள் மீது சமுதாயத்தில் ஆர்வம் குறைந்து போனது. வைதிக குடும்பங்களில் பிறந்தவர்கள் கூட தம் பிள்ளைகளுக்கு வேதக் கல்வியை கற்றுக் கொடுப்பதற்கு பின்வாங்கினார்கள். வேத பாடசாலைகள் மூடப்பட்டன.
பதஞ்சலி தன் மஹா பாஷ்யத்தில் ரிக்வேதத்தில் 21, யஜுர் வேதத்தில் 101, சாம வேதத்தில் ஆயிரம், அதர்வண வேதத்தில் 9, இவ்வாறு 1131 சாகைகள்/ பிரிவுகள் உள்ளன என்று எழுதியுள்ளார். ஆனால் தற்போது கிடைத்துள்ள சாகைகள் 12 மட்டுமே. வேத பண்டிதர்கள் பலரைக் கொன்று அழித்து விட்டார்கள்.
1195 ம் ஆண்டில் பக்தியார் கில்ஜி நளந்தா பல்கலைக் கழகத்தின் மீது தாக்குதல் நடத்தி மூன்று நூலகங்களை எரித்து அழித்தான். பல லட்சம் ஓலைச்சுவடி நூல்கள் தீக்கிரையாகின. பாரததேசம், ‘விஸ்வ குரு’ என்ற ஸ்தானத்தில் இருந்த நாடு. பிரிட்டிஷார் செய்த சதிக்கு பலியானது.
வேதங்களின் காலம் என்ன? வேதங்கள் ‘அபௌருஷேயம்’. யாராலும் எழுதப்பட்டவை அல்ல. நவீன கணக்கெடுக்கும் கொள்கைப்படி வேதத்தின் காலத்தை நிர்ணயிக்க முடியாது. வில்லியம் ஜோன்ஸ், அவிநாச சந்திரதாஸ், லக்ஷ்மீதரகல்லா முதலான ஆராய்ச்சியாளர்கள் வேதத்தின் காலத்தை இன்னும் பின்னெடுத்துச் சென்றுள்ளனர்.
பொது ஆண்டு 1500 ஆண்டிலிருந்து தொடங்கிய நவீன காலத்தார், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதாக வேதத்தை கணித்துள்ளார்கள்.
நாம் பிற சாதனங்களைக் கொண்டு அறிய முடியாத விஷயங்களை வேதம் அளிக்கிறது. புண்ணியம், பாவம், தர்மம், அதர்மம், சுவர்க்கம், நரகம், கர்ம சூட்சமம், பரமேச்வர சொரூபம் போன்ற விஷயங்களை நம் வெளி உறுப்புகளைக் கொண்டு உணர முடியாதது. அவற்றை விளக்குவதால் அது வேதம் எனப்படுகிறது.
பிரத்தியக்ஷேணானுமித்வா யஸ்தூபாயன புத்யதே
ஏதம் விந்தந்தி வேதேன தஸ்மாத் வேதஸ்ய வேததா
வேதமாதா நமக்கு பலப்பல உபாயங்களைத் தெரிவிக்கிறாள். சந்தானப் பிராப்தி, சமூக ஒற்றுமை, நாட்டு நலன், சகல உயிர்களின் பாதுகாப்பு , தாம்பத்தி அனுகூலம்… முதலான பல உபாயங்கள் வேதம் மூலம் கிடைக்கின்றன.
தாய் சகல விதங்களிலும் குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கிறாளோ, தந்தையை அறிமுகப்படுத்தி அவரன்புக்கு எவ்வாறு பாத்திரம் ஆக்குகிறாளோ அதேபோல் வேதமாதா நம் அனைவருக்கும் தந்தையான பரமேஸ்வரனை காண்பிக்கிறாள்.
‘தி சீக்ரெட் ஆஃப் வேதாஸ்’ என்ற தொடரில் அரவிந்தர் வேத மந்திரங்களில் உள்ள நவீன ரகசியங்களையும் தத்துவ ரகசியங்களையும் விவரித்துள்ளார். எல்லையற்ற வேத நூல்களில் உள்ள கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் போதாது என்பது பெரியோர் கூற்று.
வேதங்கள் பிரபஞ்சத்திலேயே மிகப் புராதனமான இலக்கியமாக கருதப்படுகின்றன. அதுபோன்ற இலக்கியம் மானசீக பக்குவம், மனிதத் தன்மைக்கு அதீதமான புத்திக்கூர்மை – இவற்றிலிருந்து மட்டுமே வெளிப்பட முடியும். அத்தனை புராதனமான காலத்திலேயே இத்தனை மலர்ந்த நாகரீகமடைந்த நாடாக இருந்த பாரத தேசம் விஸ்வ குருவாக விளங்கியது. உலகில் எந்த நாட்டுக்கும் இல்லாத சிறப்பு நம் நாட்டுக்கு இருப்பதில் நாம் பெருமிதமடைய வேண்டும். கர்வம் கொள்ள வேண்டும்.
வேதங்கள் அபூர்வமான சக்திக்கு நிலையங்கள். அவற்றை உபயோகித்து இந்த பிரபஞ்சத்தை இன்னும் சக்தியோடு கூடியதாக ஆக்க முடியும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஸ்ரீவேதபாரதி என்ற அமைப்பு கடந்த இருபதாண்டு காலமாக செய்து வரும் முயற்சியின் பலன்கள் சிறிது சிறிதாக மக்களை வந்து சேருகின்றன.
வேதங்களில் உள்ள விஞ்ஞான கருத்துக்களை கணினியில் பாதுகாப்பதும், மறைந்து வருகின்ற வேத பாகங்களையும் பாடங்களையும் வேத பண்டிதர்கள் மூலம் சேகரிப்பதும், ஸ்ரீவேதபாரதி செய்துவரும் மிகப்பெரும் அருஞ்செயல்.
வேதகணிதம் அனைவரையும் வியக்க வைக்கும் விதத்திலிருக்கும் விஞ்ஞான சாஸ்திரம். இது வேத மாதாவின் பிரசாதம். கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கும் டாக்டரேட் பட்டம் பெற்றவர்களுக்கும் கூட சில தலைமுறைகளுக்கு வேத கணிதம் பற்றித் தெரியவில்லை.
வேத பாரதியின் தலைவர் டாக்டர் அவதானி அவர்கள் (9849459316) வேத கணிதத்தினை பல ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு கற்றுத்தந்து வருகிறார். திரு வி.எஸ் ராஜகோபாலன் (9490588560) அவர்களும் மாணவர்களுக்கு வேதகணிதம் கற்றுத்தருகிறார்.
வேதங்களை கௌரவிப்போம்! வேத பாடசாலை நடத்துபவர்களை ஊக்கப்படுத்தவோம்!!
தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
(Source: ருஷிபீடம் பிப்ரவரி 2020)