கொரோனா அறிகுறி உள்ளவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, தேவஸ்தான நிர்வாகி தர்மா ரெட்டி, சுவாமி தரிசனம் செய்வதற்கான வைகுண்டம் காத்திருப்பு அறை, மொட்டை அடிக்கும் கல்யாண கட்டா, அன்னதான கூடம் ஆகிய பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருப்பதால், காய்ச்சல் சளி உள்ளிட்ட நோய் அறிகுறி இருப்பவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
அதேபோன்று பக்தர்கள் கூடும் இடங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக முக்கிய தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.