கொரோனா குறித்து பரிந்துரைகளை எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாநில முதல்வர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுதும் பரவி வரும் நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாகவும் ஊரடங்கினை நீட்டிப்பது குறித்தும் பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ஊரடங்கு உத்தரவின் நிலை குறித்து மாநில முதல்வர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
பஞ்சாப், ஒடிசா மாநிலங்கள் ஏற்கெனவே ஊரடங்கினை நீட்டித்துள்ள நிலையில் மேலும் பல மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தன!.
முதவர்களுடான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் முகத்தில் முகக் காசம் அணிந்து பங்கேற்றனர். பிரதமர் மோடி வீட்டில் தயாரிக்கப்பட்ட சாதாரண முகக் கவசத்துடன் திரையில் தோன்றினார். மாநில முதல்வர்களுடன் மோடி பேசியபோது…
நான் வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் அதாவது எந்த நேரத்திலும் பணியில் தான் இருக்கிறேன். எந்த முதலவரும் எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொண்டு பேசலாம், கொரோனா குறித்த பரிந்துரைகளை வழங்கலாம். நாம் தோளோடு தோள் கொடுத்து ஒன்றாக நிற்க வேண்டும் என்றார்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை சுமார் 7,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 239 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, அது வரும் ஏப்.14ஆம் தேதி முடிவடைகிறது. ஆனால், தற்போது கொரோனா பரவலின் 3ம் கட்ட நிலை பல இடங்களில் இருப்பதால், இந்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநிலங்களும் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளன.