சென்னையில் இருந்து செயல்பட்டு வரும் சத்தியம் டிவியின் உதவி ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதன் அலுவலகத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் மூடி சீல்வைத்தனர்.
சென்னையில் சத்தியம் டிவியில் உதவி ஆசிரியராக பணியாற்றுபவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தை மூடிய சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சத்தியம் தொலைக்காட்சியின் உதவி ஆசிரியருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்தை சென்னையில் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப் பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். டிவி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதால், ஊழியர்கள் அருகில் உள்ள சத்தியம் மீடியா காலேஜில் தனிமை படுத்தப்பட்டனர்.
சென்னையில் பத்திரிகையாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து நெல்லையில் பத்திரிகையாளர் மன்றம் பூட்டப்பட்டது. இயல்பு நிலை திரும்பும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என பத்திரிகையாளர் மன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்து சமூகத் தளங்களில் தகவல்கள் பரிமாறப் பட்டன.
கொரோனாவின் கோரப் பிடியில் சென்னையில் மூன்று பத்திரிக்கை சகோதரர்கள் சிக்குண்டு தவிக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி. இந்தத் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிவரும் வேளையில், நமது கவலையும் அதிகரித்து வருகிறது. எல்லா துறைகளைப் போல் நமது பத்திரி்க்கை துறையும் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. பல இதழ்கள், நாளிதழ்கள் நடத்த முடியாமல் மூடப்பட்டு வரும் நிலையில் நமது சகோதரர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் நாம் பணியாற்றக் கூடிய நிறுவனத்திற்கு நாம் உண்மையாக உழைத்து நம்மையும், நிறுவனத்தையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே நமது சகோதரர்களுக்கு விடுக்கும் அறைகூவல் மற்றும் நினைவூட்டல் இதுவே….
பாதுகாப்புடன் இருப்போம்.. பத்திரிகை மேம்பட உழைப்போம்… என்ற கருத்துகளும் வாட்ஸ் அப் வழியே அறிவுறுத்தல்களாக வலம் வருகின்றன.