கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் திறம்பட பணியாற்றியதற்காக கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜாவை தங்கள் குழு விவாதத்தில் இணைத்துக் கொண்டு ஐ.நா., சபை கவுரவித்தது.
இந்தியாவில் முதன்முதலில் ஜனவரி மாதத்தில் கேரளாவில் தான் கொரோனா வைரஸ் தொற்று பதிவானது. ஆரம்பக் கட்டத்திலேயே தீவிர பரிசோதனை, கொரோனா தொற்றுள்ளவர்களுடன் பழகியவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை உத்தியாகவே கடைப்பிடித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நிபா வைரஸ் கிளம்பிய போது ஆற்றிய களப்பணி சுகாதார அமைச்சர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா காலத்திலும் கைக்கொடுத்தது.தற்போது கேரளாவில் 3,503 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
23 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஜூன் 23) ஒரே நாளில் 141 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், தனது மாநிலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜாவை 2020 உலக பொது சேவை தினத்தில் (ஜூன் 23) ஐ.நா., சபை குழு விவாதத்தில் பங்கேற்க அழைத்தனர்.
ஐ.நா பொதுச் செயலர் மற்றும் உலக சுகாதார நிறுவன இயக்குனர் அடங்கிய குழு விவாதத்தில் பங்கேற்றது கவுரமாக இருந்ததாக கே.கே.ஷைலஜா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.