இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரிவபாவுடன் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களது காரை மறித்த பெண் போலீஸ் ஏட்டு சோனல் கோசாய், அவரது காரை வழி மறித்து சோதனை செய்தார். அதில் காரை ஓட்டிய ஜடேஜா ‘மாஸ்க்’ (முக கவசம்) அணிந்து இருந்த நிலையில், அவரது மனைவி முக கவசம் அணியவில்லை.
இதனால் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியிடம் முகக்கவசம் அணியாதது ஏன்? என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவும், பெண் போலீஸ் ஏட்டுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடுமையான வாக்குவாதத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பெண் போலீஸ் ஏட்டு சற்று நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.