குடும்பத்துக்குள் ஏற்படும் சொத்து தகராறு எப்படி சகோதரர்களை பிரித்து வைக்குமோ அதுபோல் இப்போது திமுகவில் அடுத்த அதிரடி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது ஏற்கனவே மு க அழகிரி ஸ்டாலின் இன்று பிரிந்து பட்ட திமுக எனும் குடும்பச் சொத்து இப்போது ஸ்டாலின் கனிமொழி என்ற அண்ணன் தங்கை பாசக் கதையுடன் சென்று கொண்டிருக்கிறது… இதற்கு காரணமாக அமைந்தது ஒரே ஒரு டிவிட்டர் போட்டோதான்.
சங்கரமடத்திலாவது ரத்த சொந்தம் இல்லாத வேறொருவரை அடுத்த மடாதிபதியாக்க …. சரியான நபரை தேர்ந்தெடுத்து… சிறு வயதிலிருந்தே பயிற்சி கொடுத்து அடுத்த பீடாதிபதியாக நியமிக்கிறார்கள். திமுக என்ன சங்கர மடமா என்று கேள்வி எழுப்பிய மு கருணாநிதி இளவயதில் இருந்தே தன் மகனை அடுத்த தலைவராக்க முயற்சி செய்து சாகும்வரை தானே தலைவராக இருந்து வழிகாட்டினார். இப்போது ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை அந்த பதவிக்கு தயார்படுத்திக் கொண்டுவந்து அறிவாலயத்தை சங்கர மடம் இல்லை என்று காட்டியிருக்கிறார்
ஏற்கனவே திமுக என்பது கருணாநிதியின் குடும்பச் சொத்து என்று ஆகிவிட்ட சூழ்நிலையில் இப்போது அந்த குடும்பத்துக்கு உரிமை கோரும் வாரிசு உரிமைப் போர் தலைதூக்கி இருக்கிறது இந்த நீயா நானா போட்டிக்கு வித்திட்டு இருப்பது ஒரு பிள்ளையார் ‘சுழி’ தான்!
நெறியாளர் பனிமலர் பன்னீர்செல்வம் கலைஞர் டிவியில் தொகுப்பாளனியாக பணியாற்றி வருகிறார். இவரை வேலையை வீட்டு தூக்க கடும் முயற்சியில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்னை தீவிர பகுத்தறிவுவாதியாகவும் பெரியாரிஸ்டாகவும் காட்டிக் கொண்டு வலம் வரும் பனிமலர், தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவர். இவர் தற்போது திமுகவின் குடும்ப தொலைக்காட்சியான கலைஞர் டிவியில் நெறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர், உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் விநாயகர் சிலையை பதிவு செய்தது குறித்து கருத்து தெரிவித்த போது, “இது தேவையில்லாத ஆணி” என பதிவு செய்தார்.
அவரது இந்தப் பதிவுக்கு ஆதரவாக பெரியாரிஸ்ட், திக, மற்றும் திமுகவினர் என பலரும் ஒன்றிணைந்து உதயநிதியின் விநாயகர் பதிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதேநேரம் டுவிட்டரில் “தேவையில்லாத ஆணி உதய்” என இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.
தேவையில்லாத ஆணி உதய் என்று எதிர் தரப்பும் திகவினர் சிலருமே கருத்து பதிவிட, பணிமலர், உதயநிதி விநாயகர் சிலையை வைத்திருந்ததை தேவையில்லாத ஆணி என்றாரா அல்லது திமுக திக இயக்கங்களுக்கு உதயநிதியே தேவையில்லாத ஆணி என்று குறிப்பிட்டாரா என்ற விவாதமும் ஓடிக்கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பனிமலர் தான் பதிவு செய்திருந்த தேவையில்லாத ஆணி என்கிற பதிவை நீக்கினார். இதற்கு உதயநிதி தரப்பில் இருந்து அழுத்தம் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து உதயநிதி பதிவிட்ட விநாயகர் படம் சர்ச்சை பெரியாரிஸ்ட் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
50 வருடத்துக்கு மேலான திராவிட கட்சியின் கொள்கை, உதயநிதி பதிவு செய்திருந்த விநாயகர் சிலை புகைப்படத்தினால் அழிவை நோக்கி செல்கிறது என்று விமர்சித்தனர்.
இந்நிலையில் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக அந்த விநாயகர் சிலை புகைப்படத்தை எதற்காக பதிவு செய்தேன் என விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டார் உதயநிதி. ஆனால் அதன் பின்னர் பாஜக, அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் , உதயநிதியின் அறிக்கையில் இடப்பெற்றுள்ள சில வாக்கியங்களை மேற்கோள்காட்டி, திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி தான் என மீண்டும் 90 சதவிகிதம் ஹிந்துக்கள் உள்ள திமுக அபிமானிகளுக்கு நிரூபிப்பதற்காக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர் இது திமுக தரப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் தான் விநாயகர் விவகாரத்தை உதயநிதிக்கு எதிராக பெரிதாக்கியது பனிமலர் என சிலர் உதயநிதியிடம் தகவலை கொண்டு சேர்க்க…, எங்களிடம் வேலை செய்துவிட்டு எனக்கு எதிராகவே கருத்து தெரிவிப்பதா என கொந்தளித்த உதயநிதி, அவரை கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து வேலையை விட்டு உடனே தூக்கியாகணும் என்றாராம்.
ஆனால் பனிமலரை எக்காரணம் கொண்டும் வேலையை விட்டு தூக்க கூடாது என்று நிர்வாகத்துக்கு திமுக எம்பி கனிமொழி உத்தரவிட்டுள்ளாராம்.
இப்படி இரு தரப்பும் ஒரு பெண்ணை மையமாக வைத்து முட்டி மோதிக் கொண்டிருக்க கலைஞர் டிவி என்ற குடும்பச் சொத்து யாரின் ஆதிக்கத்தில் இயங்குகிறது என்பது இந்த விவகாரத்தில் வெளியில் தெரிந்து விடும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
கலைஞர் டிவிக்கு முறைகேடாக 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட விவகாரத்தில் கனிமொழி தயாளு அம்மாள் உள்ளிட்டோரின் பெயர் பெரிதாக அடிபட்டது. இப்போது இந்த விவகாரம் கலைஞர் டிவி மீதான உரிமை யாருடையது என்பதை வெளிக்காட்டி விடும் என்கின்றனர் எதிர்தரப்பினர்.
ஏற்கனவே திமுக தலைமை மீதோ தலைமையின் குடும்பத்தினர் குறித்தோ விமர்சனம் செய்யும் திமுகவினர் எவராக இருந்தாலும் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவது தான் திமுகவின் உள்கட்சி ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை அடியொற்றி திமுகவின் குடும்ப தொலைக்காட்சியான கலைஞர் டிவியிலும் அதுபோன்ற ஜனநாயக மரபு காப்பாற்றப்படும் என்று ட்விட்டர் தளத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.