கொரோனாவுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளாமல் விதிமுறைகளை மீறி நடமாடியதாக இளைஞர் ஒருவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6 மாதகாலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அந்த இளைஞரை அவரது காதலி வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தொற்று பரவாமல் இருக்க தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்ற முறை கையாளப்படுகிறது.
கொரோனா சந்தேகம் இருந்தாலோ வெளிப்பயணம் மேற்கொண்டவர்களோ 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பின்னர் வழக்கம்போல் நடமாடலாம்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் யூசுஃப் என்ற ஒரு இளைஞரை ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஒரு ஏணி தயார் செய்து அதன் மூலம் தப்பித்து வெளியில் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார்.
அவர் தங்கி இருந்த ஹோட்டல் நிர்வாகத்தினர், ஏணியை கண்டுபிடித்து அப்புறப்படுத்தி உள்ளனர். ஆனால் அந்த இளைஞர் மீண்டும் தன் வேலையைக் காட்டியுள்ளார்.
அதனால் இந்த விவகாரம் போலீசார் வரை சென்றுள்ளது. தப்பித்து சென்ற இளைஞரை அவரது காதலி வீட்டில் போலீசார் கைது சென்றனர்.
காதலி வீட்டில் உள்ள பெரிய கப்போர்டில் ஒளிந்துகொண்டிருந்த இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொள்ளாமல் விதியை மீறியதால் அவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காதலிக்கு பிறந்தநாள் என்பதால் தான் அப்படி செய்ததாக இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்