ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து, 70 ஆயிரம் ரூபாய் திருடிய, மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, அரும்பாக்கம், முத்தம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 36; தனியார் பள்ளி ஆசிரியை. இவர், நேற்று அரும்பாக்கம் காவல் நிலையத்தில், புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: வில்லிவாக்கத்தில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கியில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். நேற்று முன்தினம், வங்கியில் இருந்து பேசுவதாக, தொடர்பு கொண்ட மர்ம நபர், என் சேமிப்பு அட்டையின் விபரங்களை பெற்றார்.
சிறிது நேரத்திலேயே, சேமிப்பு கணக்கிலிருந்த, 70 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக, என் மொபைல் எண்ணிற்கு, குறுஞ்செய்தி வந்தது.உடனே, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொடர்பு கொண்டு பேசியபோது தான், நான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.
என்னை ஏமாற்றிய நபரை கைது செய்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இது குறித்து, அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சில வாரங்களில், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, அடுத்தடுத்து, நுாதன முறையில், பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன.
இது குறித்து, தொடர்ந்து புகார்களும் குவிந்து வருகின்றன. அப்பாவிகளை, போனில் பேசி ஏமாற்றி வரும் நபரை பிடிக்க, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.