கேஜ்ரிவால் ‘சிங்கப்பூர் வைரஸ்’ குறித்து வெளியிட்ட ட்வீட், அதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் இந்திய தூதுவர், சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பதிலடி ஆகியவற்றை வைத்து அர்விந்த் கேஜ்ரிவாலை ஒரு காமெடி பீஸ் போல உருவகப்படுத்தி எள்ளி நகையாடுவது மிகவும் அபாயகரமானது.
மேலோட்டமாகப் பார்த்தால், கேஜ்ரிவாலுக்குக் கீழ்க்காணும் விஷயங்கள் கிஞ்சித்தும் தெரியாது என்பதுபோன்ற அபிப்ராயமே அனைவருக்கும் ஏற்படும்:
- சிங்கப்பூர் வைரஸ் என்ற எதுவும் இல்லை.
- சிங்கப்பூர் – இந்தியாவுக்கு இடையிலான விமானப்போக்குவரது பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகளை கோவிட்-19 பெருமளவு பாதித்திருப்பதாக யாதொரு புள்ளிவிபரமும் இல்லை.
இதெல்லாம் தெரிந்தே கேஜ்ரிவால் ஏன் சிங்கப்பூர் வைரஸால் அபாயம்; உடனே விமான சேவையை நிறுத்துக; குழந்தைகளுக்கு தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்க என்று ட்வீட் செய்ய வேண்டும்? சிம்பிள்!
வெளிநாட்டு ஊடகங்களைப் பொறுத்தமட்டில், குறிப்பாக இந்திய துவேஷத்தில் ஊறித்திளைக்கிற வெளிநாட்டு ஊடகங்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் எந்த மாநிலத்தில் எது நிகழ்ந்தாலும், அது அவர்களுக்கு மோதிஜி மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தக் கிடைக்கின்ற ஒரு உன்னத வாய்ப்பு!
அதனால்தான், டெல்லியில் உபி, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எல்லைகளில் தங்கள் ஊருக்குச் செல்லத் திரண்டபோதும் சரி; டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்று கேஜ்ரிவால் பிலாக்கணம் பாடியபோதும் சரி – மோதிஜியின் தோல்வி என்றே வரிந்து வரிந்து எழுதினார்கள்; வசைபாடினார்கள். இதெல்லாம் கேஜ்ரிவாலின் திருவிளையாடல்கள் என்பதை அவர்கள் எளிதில் கடந்து போனார்கள்.
இந்தாள் ‘சிங்கப்பூர் வைரஸ்’ என்று சொன்னதற்கு, சிங்கப்பூர் பதிலடியாக ‘இல்லை; அது Indian variant ’ என்று பதிலளித்திருந்தால் என்னாகியிருக்கும்? இந்திய வைரஸ் என்ற பிரச்சாரம் வலுவடைந்திருக்கும் என்பதோடு இந்தியா – சிங்கப்பூருக்கு இடையிலான நல்லுறவு பாதிக்கப்பட்டிருக்கும். நல்லவேளை, இரண்டு அரசுகளும் கேஜ்ரிவாலின் இந்த குள்ளநரித்தனத்துக்கு பலியாகவில்லை என்பதே ஆறுதல்.
கேஜ்ரிவால் முட்டாள் அல்ல; குள்ளநரித்தனம் மிக்கவர். அவரைப்போன்ற பல அரசியல்வாதிகள் இந்தியா முழுக்க உள்ளனர் – தமிழகம் உட்பட! இவர்களை ‘காமெடி பீஸ்’ போலச் சித்தரித்து மீம்ஸ் போட்டு சிரித்துவிட்டுப் போவது நமது அறியாமையாகி விடும். இவர்கள் விஷப்பாம்புகளை விடவும் அபாயகரமானவர்கள் ஆவர்.
Venugopalan R