மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என ஜனநாயகத்தில் சட்டம் இருக்கிறது என மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ் மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர், கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்… “மதுரையில் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் எல்லாமே பற்றாக்குறையாக இருந்தது. தற்போது தடுப்பூசியை தவிர அனைத்தும் கட்டுபாட்டுக்குள் உள்ளது. கொரோனா தொற்று குறைய தொடங்கியது இயற்கையாக நடக்கவில்லை! மதுரையில் விஞ்ஞான ரீதியாக திட்டமிட்ட தடுப்பு நடவடிக்கையால் கொரோனா குறையத் தொடங்கியுள்ளது!
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று புறநகரில் பரவி இருந்தால் சமாளிக்க முடியாத அளவிற்கு நிலைமை கை மீறி சென்று இருக்கும்.
மதுரை மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து பணியாற்றினார்கள். மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கொரோனாவை மிக வேகமாக கட்டுப்படுத்த முடியும்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கொரோனா இறப்பு குறித்து தகவல் இருந்தால் எங்களிடம் வழங்கலாம். அதிமுக ஆட்சி காலத்தில் இறப்புகள் மறைக்கப்பட்டது குறித்து நான் வழக்கு தொடர்ந்தேன். அதிமுக ஆட்சிக் காலத்தில் 1500 இறப்புகளை மறைத்து 200 என கூறினார்கள்.
சில தவறுகளில் இருந்து தான் சரியான பாதைக்கு செல்ல முடியும். தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. அமெரிக்காவில் 8 கோடி தடுப்பூசி கூடுதலாக உள்ளது. 8 கோடி தடுப்பூசியில் 4 கோடி தடுப்பூசியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை தேவை. ஒன்றிய அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் மேலாண்மை குறைவு காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் நிரந்தரமாக மருந்து தயாரிப்பு ஆலைகளை திட்டமிட்டு உள்ளோம்!
தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளோம். மாநிலங்கள் எல்லாம் ஒன்றிணைந்தது தான் மத்திய அரசு. மத்திய அரசு எல்லா மாநிலங்களையும் கட்சி பாகுபாடின்றி பார்க்க வேண்டும். மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என ஜனநாயகத்தில் சட்டம் இருக்கிறது.
பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என அரசியல் செய்யக் கூடாது, இதில் யாரும் அரசியல் செய்யக் கூடாது, அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு ஒரே மாதிரியாக சமமாக பார்க்க வேண்டும்” எனக் கூறினார் தமிழ்மாநில அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.