அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் அதிகளவில் நாவல் பழங்கள் விளைச்சல் இருந்தாலும், வெளிமாநிலங்களில் இருந்து பழங்கள் வருவதால், உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், சேமித்து வைத்திருக்க, குளிர்பதன கிடங்கு அமைத்துத் தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, முடுவார்பட்டி, ஆதனூர், வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, மேட்டுப்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500 ஏக்கர் அளவில் விவசாயிகள் நாவல் பழ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் நாவல் பழங்களை, மதுரை மற்றும் முடுவார்பட்டி பழசந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம்.
35 கிலோ எடையுள்ள நாவல் பழம் ரூ.1500 முதல் ரூ.25000 வரை விலை கிடைத்து. வந்தது. ஆனால் தற்போது, அதிகளவில் நாவல் பழங்கள் வெளிமாநிலத்தில் இருந்து வருவதால், சந்தையில் விலை சரிந்து, 35 கிலோ எடையுள்ள நாவல் பழங்கள் ரூ. 400 முதல் ரூ. 500 வரை மட்டுமே விலை போகிறது. இதனால், தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்றும், கூலிஆட்களுக்கு கூலி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. என்றும், வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், இப்பகுதியில், அதிகளவில் விளையும் நாவல் பழங்களை பதப்படுத்த குளிர்பதன கிடங்கும், பழக்கூழ் தொழிற்சாலையும் அமைத்து உரிய ஆதார விலை கிடைக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.
நாவல் பழங்கள் 2 அல்லது 3 மாதங்கள் சீசனில் விளையும் பழங்கள். இதனால் தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து வரும் நாவல் பழங்களை தடுத்து, உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது போல், கொய்யா விளைச்சலும் அதிக அளவில் இருந்தாலும், குளிர்பதனக் கிடங்கு இல்லாததால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
அலங்காநல்லூர் பகுதியில் அதிகளவில் விலையும் கொய்யா பழங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், பழக்கூழ் தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, முடுவார்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில், விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் மா, கொய்யா உள்ளிட்ட பழங்களை மதுரை மற்றும் முடுவார்பட்டி பழ சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். 35 கிலோ எடையுள்ள, கொய்யா ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை கிடைத்து வந்தது.
ஆனால், தற்போது அதிகளவில் கொய்யா பழம் விளைந்து வருவதால், சந்தையில், விலை சரிந்து 35 கிலோ எடையுள்ள கொய்யா ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை போகிறது. இதனால், தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்றும், கூலிஆட்களுக்கு கூலி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும், வேதனையடைந்த விவசாயிகள் குவியல் குவியலாக பழங்களை கீழே கொட்டி வருகின்றனர்.
தொடர்ந்து, கால்நடைகளுக்கும் இரையாக்குகின்றனர். மேலும், இப்பகுதியில் அதிகளவில் விளையும் மா, கொய்யா பழங்களை பதபடுத்த குளிர்பதன கிடங்கும், பழகூழ் தொழிற்சாலையும் அமைத்து உரிய ஆதார விலை கிடைக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.