இந்தியா இலங்கை இரண்டாவது டி20 போட்டி
இந்தியா அபார வெற்றி – தொடரை வென்றது
-> முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசலாவில் நடைபெற்றது. மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.
இந்திய அணி பூவா தலையா வென்று இலங்கை அணியை முதலில் விளையாடச் சொன்னது. இலங்கை அணியில் பத்தும் நிசாங்கா (53 பந்துகளில் 75 ரன்), குணதிலகா (29 பந்துகளில் 38 ரன்), தாசுன் ஷனகா (19 பந்துகளில் 47 ரன், 2 ஃபோர், 5 சிக்சர்கள்) ஆகியோர் மூவரும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.
இவர்கள் மூவரும் 101 பந்துகள் விளையாடி மொத்தம் 160 ரன்கள் எடுத்துள்ளார்கள் என்றால் இவர்களின் ஆட்டம் எப்படியிருந்தது எனப் பார்த்துக்கொள்ளுங்கள்.
பின்னர் ஆடவந்த இந்திய அணியின் பேட்டிங் இலங்கை அணியின் பேட்டிங்கைவிட மிகச் சிறப்பாக இருந்தது. இங்கேயும் மூன்று வீரர்கள் மட்டுமே சிறப்பாக ஆடினார்கள்.
ஷ்ரேயாஸ் ஐயர் (44 பந்துகளில் 74 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்), சஞ்சு சாம்சன் (25 பந்துகளில் 39 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்), ரவீந்தர் ஜதேஜா (18 பந்துகளில் 45 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய மூவரும் 103 பந்துகளில் 158 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்தனர்.
பதிமூன்றாவது ஓவரில் சஞ்சு சாம்சன் அடித்த 4 6 6 6 மற்றும் 16ஆவது ஓவரில் ஜதேஜா அடித்த 6 4 4 4 ஆட்டத்தின் போக்கை இந்திய அணியின் பக்கம் திருப்பியது.
இலங்கை அணியின் 183 ரன் என்ற இலக்கு சற்று கடினமானதுதான். ஆயினும் இந்திய அணி இலக்கை அடைந்து தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆட்ட நாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டார்.