ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழக வீரர் குகேஷ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனான குகேஷ், ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
13 நாடுகளில் இருந்து 183 வீரர்கள் பங்கேற்ற செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், 9 சுற்றுகளாக நடத்தப்பட்ட செஸ் போட்டியில், பங்கேற்று 7 வெற்றி, இரண்டு டிரா என மொத்தம் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
2006ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் குகேஷ். அப்பா ரஜினிகாந்த் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். அம்மா பத்மா மைக்ரோபயாலஜிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.
செஸ் மீது குகேஷிற்கு இருந்த தீராத ஆர்வம், அவரைக் கற்றுக்கொள்ள தூண்டியது. 7 வயது முதலே செஸ் விளையாட தீவிர பயிற்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்தார்.
குகேஷ், முதன் முறையாக 2015 ஆம் ஆண்டு ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப்பின் 9 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்டு வென்றார்.
2018 ஆம் ஆண்டு உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் 12 வயதிற்குட்பட்ட பிரிவில் வெற்றி பெற்றார்.
அதன் 2018 ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில், U-12 தனிநபர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ், U-12 அணி ரேபிட் மற்றும் பிளிட்ஸ் மற்றும் U-12 தனிநபர் கிளாசிக்கல் என வெவ்வேறு பிரிவுகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார்.
பிரான்சில் நடைபெற்ற 34 ஆவது ஓபன் டி கேபெல்லே லா கிராண்டே சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றார்.
குகேஷ், சேர்ஜே கார்ஜக்கினுக்குப் பிறகு உலகின் மிக இளம் வயது கிராண்ட்மாஸ்டராகக் வரக்கூடிய வாய்ப்பை ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் காரணமாக இழந்தார்.
ஜனவரி 15, 2019 அன்று தனது 12வது வயதில், தில்லியில் நடைபெற்ற நடைபெற்ற 17 ஆவது தில்லி சர்வதேச ஓபன் சதுரங்கப் போட்டியில் சக வீரர் டி கே சர்மாவைத் வென்று, உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
தற்போதைய நிலையில் இந்தியாவில் மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டியலில் பிடித்துள்ளார். உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ், 2021ம் ஆண்டு கெல்பாண்ட் சேலஞ்ச் செஸ் பட்டத்தை வென்றார்.
ஸ்பெயினில் நடைபெற்ற 48வது ரோடா செஸ் தொடரில், மொத்தம் 13 நாடுகளைச் சேர்ந்த 183 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, சத்வானி, பகத் என நான்கு பேர் பங்கேற்றனர்.
முதல் 7 சுற்று முடிவில் ஆர்மேனியாவின் மார்ட்டிரோஸ்யன் (6.5), இந்தியாவின் குகேஷ் (6.0), பிரக்ஞானந்தா (5.5) முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
இந்த போட்டியில் எட்டாவது சுற்றில் குகேஷ், ஹோண்டுராசின் நகுனை வென்றார். பிரக்ஞானந்தா, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற வீரரை எதிர்கொண்டு வெற்றி கண்டார்.
இதனைத்தொடர்ந்து 9வது சுற்றில் 15 வயதான குகேஷ், இஸ்ரேலைச் சேர்ந்த 49 வயது செஸ் வீரரான விக்டரை எதிர்கொண்டார். வெள்ளை காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 29 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, ஆர்மேனியாவின் ஹெய்க்கை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 37வது நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். ஒன்பது சுற்று முடிவில் குகேஷ், 8.0 புள்ளிகள் பெற்று தனி நபராக முதலிடமும் பிரக்ஞானந்தாலுக்கு இந்த போட்டியில் மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குகேஷ்,
“லா ரோடாவில் தங்கியிருந்ததையும் விருந்தோம்பலையும் அனுபவித்து மகிழ்ந்தேன், மேலும் முக்கியமாக இந்த ஆண்டின் எனது முதல் ஓபன் பட்டத்தை வென்றேன், குறிப்பாக தவறுகளுக்கு மிகவும் நெருக்கமாகவும், படபடக்கும் இதயத்துடனும் வெற்றியை எட்டிப்பிடித்தேன்,” என பதிவிட்டுள்ளார்.