மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவருக்கும், கவுசல்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் கடந்த 1-ஆம் தேதி மதுராவில் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் மனோகரன் குடியிருப்பு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. எனவே மாட்டின் மீது இரு சக்கர வாகனம் மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் மனோகரனை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து அவரது உடல் பாகங்களான கண்கள், இதயம், கல்லீரல் ஆகியவை அவரது மனைவியின் ஒப்புதலோடு தானம் செய்யப்பட்டு ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படுபவர்களுக்கு உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும் எனவும், இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெறுகின்றார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தில்லியிலிருந்து விமானம் மூலம் மனோகரனின் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.