கொரானா பொதுமுடக்கக் காலத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் ‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ என்ற இலவச உணவு தானிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.
இத்திட்டத்தின்படி பாரதம் முழுவதும் உள்ள ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷனில் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள ஆதரவற்றோர், ஏழை குடும்பங்களுக்கு மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்களைப் பெறுவார்கள்.
கடந்த செப்டம்பரில் இத்திட்டத்தை டிசம்பர் 31 வரை 3 மாதங்களுக்கு நீட்டுத்த மத்திய அரசு தற்போது மேலும் ஒரு ஆண்டு முழுமைக்கும் நீட்டித்திருக்கிறது. சமீபத்தில் கொரோனா மற்றொரு உருவத்தில் சீனா அமெரிக்க போன்ற நாடுகளை தாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த இலவச உணவு தானிய திட்டத்தை அடுத்தாண்டு டிசம்பர் வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அமைச்சரவையின் இந்த முடிவை “நாட்டின் ஏழைகளுக்கு புத்தாண்டு பரிசு” என்று மத்திய அரசு வர்ணித்துள்ளது. அமைச்சரவை எடுத்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “இத்திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை வழங்குவதற்கான முழுச் சுமையையும் மத்திய அரசே ஏற்கும்.
உணவு தானியங்களை பெற, பயனாளிகள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு இனி ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி செலவிடும்” என்ற தெரிவித்தார்.