சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீமான் (நாம் தமிழர் கட்சி) கட்சியினரின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு படையினர் (என்.ஐ.ஏ.,) சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கை நேரில் ஆஜராகுமாறு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இன்று கோவை ஆலாந்துறை ஆர்ஜி நகரில் ரஞ்சித், காலப்பட்டி முருகன், திருச்சி வயலூரில் சாட்டை முருகன், தென்காசி சிவகிரி இசை மதிவாணன், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியின் முருகன் விஷ்ணு உள்ளிட்டோர் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை மேற்கொண்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் தேச விரோத சக்திகளுடன் நிதிப் பரிமாற்றம் மற்றும் தொடர்பில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாகத் தெரிகிறது
தமிழகத்தில் 6 இடங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீரென்று சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கை போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்டிடிஈ இயக்க நபர்களுடன் யார்-யார் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சீமான் கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் விடுதலைப்புலிகள் குறித்து பேசுவதும், அவர்களுடனான தொடர்புகள் குறித்து விளக்குவதுமாக இருந்து வருகின்றனர். மேலும், அரசியல் கட்சி நடத்தி, வெறும் யூடியூபில் நிகழ்ச்சிகளைப் பேசிக் கொண்டு மிதமிஞ்சிய செல்வச் செழிப்பில் இவர்கள் இருப்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதன் அடிப்படையிலேயே சீமான் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர் பாலாஜி. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தற்போது பெங்களூரில் தங்கி இருந்து பணி புரிந்து வருகிறார். நாம் தமிழர் கட்சி உறுப்பினரான இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் இன்று அதிரடி சோதனை நடத்தி ,பாலாஜியின் மனைவியிடம் விசாரித்துச் சென்றனர்.
திருச்சி, வயலூர் ரோடு சண்முகா நகரில் உள்ள சீமான் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீட்டில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் மற்றும் சிம் கார்டுகளை எடுத்துச் சென்றனர். வரும் 7-ம் தேதி சாட்டை துரைமுருகன் சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கப் பட்டது. சம்மனை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.
கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆர்.ஜி.நகரைச் சேர்ந்த யுடியூபரான ரஞ்சித்குமார், சீமான் கட்சியின் தொழில்நுட்ப பாசறை பிரிவு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் கட்சியில் இருந்து விலகி, வீட்டில் இருந்த படியே சில பணிகளில் ஈடுபட்டுள்ளார். இன்று அதிகாலை 4 மணிக்கு 12 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இவரது வங்கிg கணக்கில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைs சேர்ந்த சிலருக்கு பணம் அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
கோவை காளப்பட்டி சரஸ்வதி கார்டனைச் சேர்ந்த முருகன் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தினர். சோதனையின் போது பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி அது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியை சேர்ந்தவர் மதிவாணன், சீமானின் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அப்பகுதியில் ஸ்டூடியோவும், இ-சேவை மையமும் நடத்தி வருகிறார். இவரது ஸ்டூடியோவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள பகைவரைவென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு, சீமான் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். அவரது வீட்டிலும் என் ஐ ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
சீமான் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனைகளில் 50-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சீமான் கட்சியினரின் வீடுகளில் இன்று நடை பெற்றுள்ள இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் உடனடியாக சோதனையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை பிற்பகலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.