கர்நாடகாவில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநிலம் முழுவதும் இரண்டாம் கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதற்காக ராகுல் நேற்று காலை தில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடகாவுக்கு வந்தார். அந்த விமானத்தில் ராகுலுடன் அவரது உதவியாளர் கௌசல் வித்தியார்த்தி மற்றும் பாதுகாவலர்கள் வந்தனர்.
அவர்கள் வந்த விமானம் பகல் 11.25 மணி அளவில் ஹூப்ளி விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது அந்த குட்டி விமானத்தில் திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டது. நடுவானில் குலுங்கிய அந்த விமானம் ஹூப்ளி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை ராடார் திரையில் இருந்து சுமார் 3 நிமிடங்கள் மாயமாய் மறைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அந்த குட்டி விமானத்துடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து ராகுல் விமானம் தரை இறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இரு முறைகள் தரை இறங்க முயன்றும் விமானிகளால் அந்த குட்டி விமானத்தை தரை இறக்க முடியவில்லை. திடீரென அந்த விமானம் இடது பக்கமாகச் சாய்ந்தது. பல முறை குலுங்கவும் செய்தது.
இதனால் ராகுலும், அவரது பாதுகாவலர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் விமானியும் துணை விமானியும் போராடி மூன்றாவது முயற்சியில் தரை இறக்கினர். அதிர்ஷ்டவசமாக வேறு எந்த பிரச்சனையும் எழாமல் விமானம் தரை இறங்கியதால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இருப்பினும் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காங்கிரஸ் தலைவர்களுக்கும், ராகுலின் பாதுகாவலர்களுக்கும் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஹூப்ளியில் உள்ள கோகுல் நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, தகவல் அறிந்ததும் நேற்று பிரதமர் மோடி சீனாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் ராகுல் காந்தியை போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில், ராகுலின் செயல் தற்போது அரசியல் ரீதியாக சர்ச்சை ஆக்கப்பட்டு வருகிறது. ராகுலை கொல்ல சதி என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் காங்கிரஸார் பிரசாரம் செய்து வருகின்றனர். கர்நாடக தேர்தல் நடைபெறுவதால், அனுதாப ஓட்டுகளைப் பெற்றாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே பிரதமர் மோடி விசாரித்ததை அன்றைய வாஜ்பாயுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள் சிலர். நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியபோது, பிரதமராக இருந்த வாஜ்பாய், உடனே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சோனியாவிடம் தான் நலம் விசாரித்தார். நீங்க்ள் பத்திரமாக இருக்கிறீர்களா என்று தொலைபேசியில் கேட்டார் வாஜ்பாய்.
இந்நிலையில், காங்கிரஸ் சமூக வலைத்தள வாசிகளின் விமர்சனத்துக்கு ஏற்ப, ஒருவர் இதற்கு சோனியாவையே மையமாக்கி ஒரு டிவிட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸின் வெற்றிக்காகவும் பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தவும், ராகுலையே தியாகம் செய்யத் தயாராகிவிட்டார் சோனியா என்று ஒரு கருத்துப் பதிவை இட்டிருக்கிறார் அவர்.