சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாட்டு இறைச்சி என்ற பெயரில் வந்த ஒரு டன் எடையுள்ள நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோத்பூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் தொடர் வண்டியில் 20 பெட்டிகளில் இரண்டு டன் மாட்டு இறைச்சி வந்துள்ளது. அதனை பெற்றுக்கொள்ள யாரும் வராததாலும், அதே நேரத்தில் அதில் அழுகிய வாடை வீசியதாலும் சந்தேகமடைந்த உணவு பாதுகாப்பு துறை மற்றும் ரயில்வே சுங்கத் துறை அதிகாரிகள் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெட்டியில் இருந்த இறைச்சியில் நாயின் வாலைப் போன்ற உறுப்பு இருந்ததால் அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.
கடந்த சில நாட்களாக அவ்வப்போது இது போன்று பார்சல் பெட்டிகள் சென்னை ரயில் நிலையத்தில் இறக்கப்படுகிறது என்ற ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று திடீரென இந்த சோதனையை மேற்கொண்டதாகக் கூறப் படுகிறது. அப்போது 12 பெட்டிகளில் ஆயிரம் கிலோ கறி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதனை சோதனை செய்த போது, அதில் தோல் உரிக்கப்பட்ட நாய் கறிகள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற சில பெட்டிகளில் நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு கறிகளை பிரித்து அறியாத அளவிற்கு, சரியான முறையில் பதப்படுத்தாமல் வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று பல மாதங்களாக கறிகள் சென்னை எழும்பூரில் இறக்கப்பட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்தும் நாய் கறிகள் என்பது இன்று தான் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
அந்த இறைச்சியை கைப்பற்றிய அதிகாரிகள் அதன் மாதிரிகளை சோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமிருந்த இறைச்சியை கொடுங்கையூர் குப்பைக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இறைச்சியை அனுப்பியவர்கள் யார் என்பதை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும், இந்த இறைச்சியை எந்த தனியார் உணவகத்திற்காக கொண்டுவரப்பட்டது என்கிற கோணத்தில் விசாரனை நடத்தவிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.